மும்பை: 2017ஆம் ஆண்டு புனே அணியின் கேப்டனாக இருந்த தோனியை விமர்சித்து கேப்டன்சியில் இருந்து நீக்கிய சஞ்சீவ் கொயங்கா, இன்று லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் சுயநலமான வீரர் என்ற விமர்சித்திருக்கிறார். இது இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ அணியின் தரப்பில் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் ரூ.21 கோடிக்கும், ரவி பிஷ்னாய் மற்றும் மயங்க் யாதவ் தலா ரூ.11 கோடிக்கும், ஆயுஷ் பதோனி மற்றும் மோசின் கான் இருவரும் தலா ரூ.4 கோடிக்கும் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். இந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ரீடெய்ன் செய்யப்படாமல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார்.

லக்னோ அணியின் கைகளில் ஒரு ஆர்டிஎம் கார்டு இருக்கும் சூழலில், பர்ஸ் தொகை ரூ.69 கோடி கைவசம் உள்ளது. இந்த முடிவினை லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா, ஆலோசகர் ஜாகீர் கான் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உள்ளிட்டோர் கூட்டாக இணைந்து எடுத்துள்ளனர். அதேபோல் கேஎல் ராகுலை விடுவிக்க வேண்டும் என்பதில் சஞ்சீவ் கொயங்கா தீவிரமாக இருந்துள்ளார்.
ஏற்கனவே ஐபிஎல் தொடரின் போது களத்திலேயே 100 கேமராக்கள் சுற்றி இருக்கும் போது கேஎல் ராகுலை லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா வெளுத்து வாங்கினார். இருப்பினும் கேஎல் ராகுலை அழைத்து அவர் சமாதானம் செய்ததால், பிரச்சனை இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் ரீடெய்ன் செய்யப்பட்ட பட்டியல் அறிவிக்கப்பட்ட போது, கேஎல் ராகுல் குறித்து சஞ்சீவ் கொயங்கா பேசிய வார்த்தைகள் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ அணியில் சுயநலமாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டோம்.. அணியின் வெற்றிக்காக விளையாடும் வீரர்களே முக்கியம் என்று தெரிவித்தார். இதன் மூலமாக கேஎல் ராகுலை சொந்த சாதனைகளுக்காக விளையாடும் வீரர் என்ற சஞ்சீவ் கொயங்கா மறைமுகமாக விமர்சித்திருப்பது தெளிவாக புரிய வந்துள்ளது.
ஏற்கனவே சஞ்சீவ் கொயங்கா 2017ஆம் ஆண்டு தோனியுடன் நேரடி மோதலில் ஈடுபட்டார். 2016ஆம் ஆண்டு புனே அணியை சஞ்சீவ் கொயங்கா வாங்கி இருந்தார். அந்த சீசனில் புனே அணி 9வது இடத்தில் நிறைவு செய்தது. இதனால் டென்ஷனான சஞ்சீவ் கொயங்கா, தோனி கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகவில்லை. நாங்கள் தான் புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தை நியமனம் செய்கிறோம்.
கடந்த சீசன் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. அதனால் இளம் வீரர் ஒருவர் புனே அணியை வழிநடத்த வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்திருந்தார். இதன்பின் தோனி சாதாரண வீரராக விளையாடினார். ஆனால் 2018ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு திரும்பிய தோனி, விஸ்வரூபம் எடுத்து கோப்பையை வென்று சாதனை படைத்தார்.
இதனால் தோனியை போல் கேஎல் ராகுலும் புதிய அணிக்காக புத்துணர்ச்சியுடன் விளையாடுவார் என்று ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங் 2022ஆம் ஆண்டில் இருந்தே கேஎல் ராகுல் மீது ஆர்வமாக இருந்தார். அவர் எவ்வளவு மோசமான விளையாடினாலும், அவருக்கு ஆதரவாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.