சென்னை: ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் ரீடெய்ன் செய்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், மெகா ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. அதில் சிஎஸ்கே அணி வாங்குவதற்கு வாய்ப்புகள் வீரர்கள் யார் என்ற விவாதம் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் நடந்து வருகிறது.
சிஎஸ்கே அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரானா, சிவம் துபே மற்றும் தோனி ஆகிய 5 வீரர்கள் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். இதனால் சிஎஸ்கே அணியின் பர்ஸ் தொகையில் இருந்து ரூ.65 கோடி கழிக்கப்பட்டுள்ளது. இதனால் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி ரூ.55 கோடி தொகையுடன் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த மெகா ஏலத்தில் ஏராளமான இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2008ஆம் ஆண்டுக்கு பின் அதிகளவிலான இந்திய நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐபிஎல் ஏலமாக இது இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்திய அணிக்காக ஆடிய முகமது ஷமி, முகமது சிராஜ், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அஸ்வின் உள்ளிட்ட ஏலத்திற்கு வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் இஷான் கிஷன், தீபக் சஹர், ராகுல் சஹர் என்று இளம் பட்டாளமும் உள்ளது. வெளிநாட்டு வீரர்களில் டி காக், மேக்ஸ்வெல், சாம் கரண், லிவிங்ஸ்டன், டூ பிளசிஸ், மிட்சல் ஸ்டார்க், பட்லர், சால்ட் என்று ஏராளமான நட்சத்திர வீரர்களும் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால் 10 அணிகளும் தரமான வீரர்களை வாங்குவதற்கு மிகப்பெரிய மோதலில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் சிஎஸ்கே அணியின் குறி எந்தெந்த வீரர்களுக்கு இருக்கும் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. அதன்படி சிஎஸ்கே அணி முதலில் தோனிக்கு மாற்றான பிராண்ட் வேல்யூ உள்ள வீரர் ஒருவரை அணிக்குள் கொண்டு வர முயற்சிக்கும். அதற்கு தகுந்தாற் போல் ரிஷப் பண்ட் இருப்பதால், நிச்சயம் அவரை வாங்க சிஎஸ்கே கடுமையான முயற்சிகளை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தோனி மற்றும் சிஎஸ்கே அணியின் சிஓஓ சுந்தர் ராமன் இருவரும் ரிஷப் பண்ட் உடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். அதேபோல் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேன் மற்றும் ஆஃப் ஸ்பின்னர் ஒருவரை கொண்டு வர சிஎஸ்கே அணி திட்டமிடும். ஏனென்றால் மொயின் அலிக்கு மாற்று வீரரை தயார் செய்ய வேண்டிய தேவை உள்ளது.
2021ஆம் ஆண்டு ஏலத்தின் போது சிஎஸ்கே அணியின் குறி கிளென் மேக்ஸ்வெல்லுக்கு தான் இருந்தது. அவர் கிடைக்கவில்லை என்பதால், மொயின் அலியை வாங்கினர். இதனால் இம்முறை கிளென் மேக்ஸ்வெல்லை குறைந்த தொகைக்குள் வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் கட்டாயம் முயற்சிக்கும். அதேபோல் கடந்த மெகா ஏலத்தில் தீபக் சஹரை ரூ.14 கோடி கொடுத்து சிஎஸ்கே அணி வாங்கியது.
அவர் அதிகளவில் காயமடைந்ததால், சிஎஸ்கே அணி அவரை ரீடெய்ன் செய்யவில்லை. இதனால் தீபக் சஹருக்கு மாற்றாக சிஎஸ்கே அணி தரப்பில் அனுபவ வீரரான முகமது ஷமியை டார்கெட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பவர் பிளே ஓவர்களில் முகமது ஷமியின் பவுலிங் உச்சத்தில் இருக்கும். பவர் பிளே முகமது ஷமி, டெத் ஓவர்களில் பதிரானா இருவரும் இருந்தால், மிடில் ஓவர்களை ஜடேஜா உள்ளிட்டோரை வைத்து எளிதாக சமாளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.