மும்பை: பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளதாக அந்த அணியின் ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் அணியில் ரீடெய்ன் செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், அடுத்த சீசனில் ரிக்கி பாண்டிங் உடன் இணைந்து பணியாற்ற உள்ளததை எதிர்பார்த்திருப்பதாக கூறியுள்ளார்.
பஞ்சாப் அணி தரப்பில் 2 வீரர்கள் மட்டுமே ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளார். நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் ரூ.5.5 கோடிக்கும்,. பிரப்சிம்ரன் சிங் ரூ.4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ரூ.110.5 கோடியுடன் பஞ்சாப் அணி நிர்வாகம் மெகா ஏலத்தை சந்திக்கவுள்ளது. இம்முறை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் பொறுப்பேற்றுள்ளதால், நிச்சயம் சிறப்பான திட்டத்துடன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கடந்த சீசனில் தவறுதலாக பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட ஷஷாங்க் சிங் இம்முறை அந்த அணியாலயே ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஷஷாங்க் சிங் பேசுகையில், பஞ்சாப் அணி நிர்வாகம் என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு வழங்கியதற்காக நன்றிக் கடன்பட்டுள்ளேன். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறேன்.
ஆனால் ஒருமுறை கூட யாரும் என்னை ரீடெய்ன் செய்ததில்லை. இதற்காகவே பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். எனது ஆட்டத்தை அடுத்த சீசனில் மேம்படுத்தி அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். அடுத்த சீசனில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் உடன் இணைந்து பணியாற்றப் போவதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது.
எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச்சிறந்த காலமாக இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் எவ்வளவு பெரிய ஜாம்பவான் என்பது அனைவருக்கும் தெரியும். அவரின் வழிகாட்டுதலில் இன்னும் கற்றுக் கொண்டு செயல்பட விரும்புகிறேன். ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக களத்தில் 100 சதவிகித உழைப்பையும் கொடுக்க வேண்டும்.
பஞ்சாப் கிங்ஸ் அணி வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதற்கு இரண்டு மடங்கு உழைப்பை கொடுத்து ரன்களை குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் 14 போட்டிகளில் களமிறங்கிய ஷஷாங்க் சிங் 354 ரன்களை விளாசி பலரின் கவனத்தையும் ஈர்த்தார். பஞ்சாப் அணி நிர்வாகம் ரூ.110.5 கோடி வைத்திருப்பதால், ரிஷப் பண்ட் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இருவரில் ஒருவரை வாங்க நிச்சயம் முயற்சிக்கும்.
ஏற்கனவே 2 வீரர்களுடனும் ரிக்கி பாண்டிங் பணியாற்றியுள்ளார். அதேபோல் கேஎல் ராகுலுக்கு பின் நல்ல பிராண்ட் வேல்யூ இருக்கும் வீரரை பஞ்சாப் அணியால் கேப்டனாக கொண்டு வர முடியும் என்று பார்க்கப்படுகிறது. கரீபியன் லீக் தொடரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் கீழ் இயங்கும் செண்ட் லூசியா கிங்ஸ் அணி வென்றிருப்பதால், அடுத்தடுத்து ஐபிஎல் தொடரிலும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.