கொல்கத்தா: கேகேஆர் அணி தரப்பில் சாம்பியன் பட்டம் வென்ற கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ரஸல், ஹர்சித் ராணா மற்றும் ரமன்தீப் சிங் ஆகிய 6 வீரர்களும் ரீடெய்ன் செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் அடுத்த சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் கேகேஆர் அணியால் ரீடெய்ன் செய்யப்படுவார் என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கேகேஆர் அணி தரப்பில் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்திய வீரர் ரிங்கு சிங் ரூ.13 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களான சுனில் நரைன் மற்றும் ரஸல் ஆகியோர் தலா ரூ.12 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கேகேஆர் அணி அன்-கேப்ட் வீரர்களான 2 பேரை தக்க வைத்துள்ளது. வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா மற்றும் ரமன்தீப் சிங் ஆகிய இருவரும் தலா ரூ.4 கோடிக்கும் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலமாக கேகேஆர் அணியின் பர்ஸ் தொகையான ரூ.120 கோடியில் இருந்து ரூ.57 கோடி கழிக்கப்பட்டுள்ளது. இதனால் மெகா ஏலத்தை ரூ.63 கோடியுடன் சந்திக்க உள்ளது.
கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், மாற்று கேப்டனை தேட தேவை கேகேஆர் அணிக்கு எழுந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் பட்டம் பெற்று கொடுத்த கேப்டன் ஒருவரை அடுத்த சீசனிலேயே ரிலீஸ் செய்வது இதுவே முதல்முறையாகும். அதேபோல் மெகா ஏலத்தில் புதிய கேப்டன் ஒருவரை தேட வேண்டிய பொறுப்பும் உள்ளது.
மேலும் கேகேஆர் அணிக்காக நீண்ட காலமாக ஆடி வரும் நிதீஷ் ராணா, அங்குரிஷ் ரகுவன்ஷி, வைபவ் அரோரா, சுயாஷ் சர்மா, மிட்சல் ஸ்டார்க், பில் சால்ட் உள்ளிட்டோரும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளனர். மெகா ஏலத்தில் கேகேஆர் அணியால் ஆர்டிஎம் கார்டை கூட பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.