கொல்கத்தா: ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக கேகேஆர் அணி தரப்பில் ரீடெய்ன் செய்யப்படும் வீரர்களின் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.11 கோடி ஊதியம் மட்டுமே அந்த அணி நிர்வாகம் கொடுக்க முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், 10 அணிகளும் ரிடென்ஷன் பட்டியலை தயார் செய்யும் பணிகளில் மும்முரமாகியுள்ளனர். 5 சர்வதேச வீரர்களை ரீடெய்ன் செய்வதற்கே ரூ.75 கோடி கொடுக்க வேண்டிய தேவை இருப்பதால், ஒவ்வொரு அணியிலும் எத்தனை வீரர்களை ரீடெய்ன் செய்யலாம் என்பதை முடிவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் கடந்த சீசனில் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற கேகேஆர் அணியில் எந்த குழப்பமும் இல்லை. அந்த அணியின் தரப்பில் நிச்சயம் 6 வீரர்களை தக்க வைக்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கேகேஆர் அணியின் ரிடென்ஷன் பட்டியலில் சுனில் நரைன், ரஸல், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்சித் ராணா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரை தக்க வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மெகா ஏலத்தின் போதும் சுனில் நரைன், ரஸல், வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய 4 பேரும் ரீடெய்ன் செய்யப்பட்டிருந்தனர். இதனால் வெங்கடேஷ் ஐயர் தவிர்த்து மற்ற 3 வீரர்கள் மீண்டும் ரீடெய்ன் செய்யப்படுவார்கள் என்பது நிச்சயம். ஆனால் யாருக்கு என்ன ஊதியம் கொடுக்கலாம் என்பதில் தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் கேகேஆர் அணியின் முதல் ரிடென்ஷனாக ரஸலை ரூ.18 கோடிக்கு தக்க வைக்க கேகேஆர் அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின் 2வது ரிடென்ஷனாக ரூ.14 கோடிக்கு வருண் சக்கரவர்த்தியையும், 3வது ரிடென்ஷனாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.11 கோடிக்கும், மீண்டும் ரூ.18 கோடிக்கு சுனில் நரைனையும், ரூ.14 கோடிக்கு ரிங்கு சிங்கையும் ரீடெய்ன் செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அன்-கேப்ட் வீரராக ஹர்சித் ராணா அல்லது ரமன்தீப் சிங் ரூ.4 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.11 கோடிக்கு ரீடெய்ன் செய்வதற்கு ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் கேகேஆர் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
அதற்குரிய மரியாதையை எதிர்பார்ப்பதாகவும், முதல் ரிடென்ஷனாக தனது பெயர் இருக்க வேண்டும் என்பதையும் விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் கேகேஆர் அணி நிர்வாகம் கேப்டன்சியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கும் முடிவை எடுக்க ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக நிதிஷ் ராணாவை கேப்டனாக கொண்டு வர கேகேஆர் அணி வீரர்கள் ஆதரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கேகேஆர் அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் மெகா ஏலத்தில் பங்கேற்கும் சூழலில், அவரை வாங்குவதற்கு சில அணிகள் தீவிரமாக போட்டிபோடும் என்று எதிர்பார்க்கலாம். லக்னோ, ஆர்சிபி மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்கு கேப்டன்கள் தேவை எழுந்துள்ளது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைவார்.