மும்பை: ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்பாக 3 அணிகளின் கேப்டன்கள் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலை விடுவிக்க தயாராகியுள்ள நிலையில், தற்போது கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரையும் விடுவிக்கும் முடிவில் அந்த அணி நிர்வாகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை இன்னும் 4 நாட்களில் வெளியிட பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இம்முறை மெகா ஏலத்தில் வீரர்களை ரீடெய்ன் செய்வதில் ஏராளமான சிக்கல்களை பிசிசிஐ உருவாக்கியுள்ளது. 6 வீரர்களை தக்க வைக்க அனுமதித்தாலும், அவர்களுக்காக ரூ.79 கோடியை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக லக்னோ அணி தரப்பில் அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுலை விடுவிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லக்னோ அணியின் ஆலோசகர் ஜாகீர் கான் தொடர்ந்து கேஎல் ராகுலிடம் பேச்சுவார்த்தை நடத்தி புரிய வைத்ததாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் டெல்லி அணி உரிமையாளர்களுக்கும், கேப்டன் ரிஷப் பண்ட்-க்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் டெல்லி அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்-ஐ மெகா ஏலத்தில் விடுவிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கேகேஆர் அணியின் சிஇஓ-வான வெங்கி மைசூர் மற்றும் பயிற்சியாளர் சந்திரகாண்ட் பண்டிட் இருவரும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதில் கேகேஆர் அணி நிர்வாகத்தின் திட்டத்தை ஸ்ரேயாஸ் ஐயரிடம் கூறியுள்ளனர்.
அதன்படி ஜாம்பவான் வீரர்களான ரஸல், சுனில் நரைன் ஆகிய இருவரையும் கட்டாயம் ரீடெய்ன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அதேபோல் வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங் மற்றும் ஹர்சித் ராணா ஆகியோரையும் கேகேஆர் அணி விடுவிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயரை குறைந்த தொகைக்கு ரீடெய்ன் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் சந்திரகாந்த் பண்டிங் அவரிடம் ரிலீஸ் செய்ய உள்ளதாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஐபிஎல் அணிகளுக்கு தலைமை தாங்கிய கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் என்று 3 கேப்டன்களும் மெகா ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ஏற்கனவே ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் சரியான கேப்டன் இல்லாமல் திண்டாடி வரும் சூழலில், 3 கேப்டன்கள் ஏலத்திற்கு வருவது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் பொறுப்பேற்றுள்ளதால், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் இருவரில் ஒருவரை அந்த அணி பெரிய தொகை கொடுத்து வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.