மும்பை: லக்னோ அணியால் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ள நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரனுக்கு ரூ.20 கோடி ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், டெல்லி அணிக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் இன்று மாலை 4 மணியளவில் அறிவிக்கப்படவுள்ளது. ஏற்கனவே சில வீரர்களின் ரீடென்ஷன் குறித்து தெரிய வந்தாலும், கடைசி நேரம் வரை தங்களின் வீரர்களை சமாதானம் செய்யும் வகையிலான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே லக்னோ அணி தரப்பில் இம்முறை கேப்டன் கேஎல் ராகுலை ரிலீஸ் செய்ய உள்ளது. இதனால் லக்னோ அணி தங்களின் முதல் ரீடென்ஷனாக நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரனை ஒப்பந்தம் செய்யவுள்ளது. அதேபோல் இந்திய அணியின் ஸ்பின்னர் ரவி பிஷ்னாய், வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மற்றும் அன்-கேப்ட் வீரராக மோசின் கான் மற்றும் ஆயூஷ் பதோனி இருவரும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஸ்டாய்னிஸ் மற்றும் க்ருனால் பாண்டியா இருவரில் ஒருவரை ஆர்டிஎம் மூலமாக வாங்கவும் லக்னோ அணி நிர்வாகம் முடிவு எடுத்திருக்கிறது. இந்த நிலையில் நிக்கோலஸ் பூரனுக்கு வழங்கப்பட உள்ள ஊதியம் குறித்து தெரிய வந்துள்ளது. அவருக்கு மட்டும் ரூ.20 கோடிக்கு ஊதியம் அளிக்க லக்னோ அணி முன் வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கேப்டன்சியையும் அவரை ஏற்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே டெல்லி அணி உரிமையாளர்களிடம் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஏராளமான நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்காத டெல்லி அணி நிர்வாகம், அவரை ரிலீஸ் செய்ய முடிவு எடுத்துள்ளது. அதேபோல் கேகேஆர் அணி நிர்வாகமும் அந்த அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரை விடுவிக்க முடிவு செய்துள்ளது.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் வாங்க பல்வேறு அணிகளும் தீவிரமாக இருக்கின்றன. குறிப்பாக டெல்லி அணி நிர்வாகம் ஸ்ரேயாஸ் ஐயருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டெல்லி அணியின் கேப்டனாக சில ஆண்டுகள் ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டுள்ளார். ஜிஎம்ஆர் நிறுவனமும் ஸ்ரேயாஸ் ஐயரை கொண்டு வர ஆர்வமாக இருப்பதால், மெகா ஏலத்தில் பெரிய தொகைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.