ஐதராபாத்: என்னை அடையாளம் கண்டு வாய்ப்பு கொடுத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு தான் விஸ்வாசமாக இருப்பேன் என்று இளம் நட்சத்திர வீரர் நிதீஷ் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். பணம் ஒரு விஷயமே இல்லை என்று கூறியுள்ள அவர், ஐதராபாத் அணிக்காக விளையாடுவதே பெருமை என்றும் கூறியுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கியுள்ள நிலையில், ஐதராபாத் அணி தரப்பில் 5 வீரர்கள் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையை கிளாசன் பெற்றுள்ளார். அவருக்கு ரூ.23 கோடி ஒப்பந்தம் கொடுத்து ஐதராபாத் அணி தக்க வைத்துள்ளது. அதேபோல் கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ.18 கோடிக்கும் ரீடெய்ன் செய்வதாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரையும் தலா ரூ.14 கோடிக்கு தக்க வைத்துள்ள ஐதராபாத் அணி, இளம் ஆல்ரவுண்டரான நிதீஷ் குமார் ரெட்டியை ரூ.6 கோடிக்கு தக்க வைத்துள்ளது. இதன் காரணமாக ஐதராபாத் அணி மொத்தமாக 5 வீரர்களை ரூ.75 கோடிக்கு தக்க வைத்துள்ளது. இதனால் ரூ.45 கோடியுடன் மெகா ஏலத்தை சந்திக்க உள்ளது.
நிதீஷ் குமார் ரெட்டியை தக்க வைத்திருப்பது ரசிகர்களிடையே அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் வங்கதேச டி20 தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி அசத்தலாக விளையாடிய அவர், ஆஸ்திரேலியா தொடருக்கான டெஸ்ட் அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் மெகா ஏலத்திற்கு வந்தால், குறைந்தபட்சம் ரூ.11 கோடி வரை செல்வார் என்று சொல்லப்பட்டது.
இதுகுறித்து நிதீஷ் குமார் ரெட்டி பேசுகையில், சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடுவது எனக்கு பெருமையளிக்கும் விஷயமாகும். தெலுங்கை தாய்மொழியாக கொண்டுள்ளதால், தெலுங்கு பகுதியை மையப்படுத்தியுள்ள அணியில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால் ஊதியம் குறித்தெல்லாம் பெரிதாக கண்டுகொள்ள போவதில்லை.
வேறு சில அணிகளிடம் இருந்தும் அழைப்பு வந்தது. ஆனால் ஐதராபாத் அணிக்காகவே தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். ஏனென்றால் யாரும் கண்டுகொள்ளாத போது, என்னை அடையாளம் கண்டு வாய்ப்பு கொடுத்தது அவர்கள் தான். அதனால் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தேன். கேப்டன் பேட் கம்மின்ஸை பொறுத்தவரை அனைத்து வீரர்களையும் சுதந்திரமாக விளையாட அனுமதிப்பார்.
எப்படி விளையாட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படி விளையாடுங்கள் என்று தட்டிக் கொடுப்பார். முதல் பந்திலேயே அட்டாக் செய்ய வேண்டும் என்றாலும் பாராட்டி அனுப்பி வைப்பார். எந்த வீரரின் மீது அவர் ஒருபோதும் அழுத்தம் கொடுத்ததில்லை. பயிற்சியாளர் விட்டோரியும் அப்படிதான். ஆஸ்திரேலியா அணிக்காக இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளதால், ஒரே மாதிரி தான் சிந்திப்பார்கள். கேப்டன், பயிற்சியாளராக ஒற்றுமையாக முடிவு எடுக்கும் போது, வீரர்கள் பின்பற்ற வேண்டியது தான் என்று தெரிவித்துள்ளார்.