சென்னை: ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா, சிஎஸ்கே அணியால் எவ்வளவு தொகைக்கு தக்க வைக்கப்படுவார் என்பது தொடர்புடைய கேள்விகளுக்கான பதில் மைக்கேல் தளத்திற்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
கடந்த சீசனின் முடிவின் போதே சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான தோனி, மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்வி ஒருமுறை தோனியிடம் நேரடியாக எழுப்பப்பட்ட போது, இதுதொடர்பாக முடிவு எடுப்பதற்க்யு இன்னும் 6 மாதங்கள் வரை அவகாசம் இருக்கிறது. அதனால் பிசிசிஐ விதிமுறைகள் வெளியான பின் முடிவு எடுப்பேன் என்று கூறியிருந்தார்.

தற்போது பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்ட விதிகளில், இந்திய அணிக்காக விளையாடி 5 ஆண்டுகளை கடந்தவர்கள், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகளை கடந்த இந்திய வீரர்கள், இனி அன்-கேப்ட் வீரர்களாக கருதப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தோனி, சந்தீப் சர்மா, பியூஷ் சாவ்லா, மோகித் சர்மா உள்ளிட்டோர் அன்-கேப்ட் வீரர்களாக மாறுவார்கள் என்பது தெரிய வந்தது.
இதனால் சிஎஸ்கே அணியால் தோனியை ரூ.4 கோடிக்கு தக்க வைக்கலாம் என்ற நிலை உருவாகியது. இருந்தாலும் தோனியின் முடிவு என்ன என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. ஏனென்றால் தோனி 43 வயதை எட்டியுள்ள நிலையில், ஒரு ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட முடியுமா என்ற சந்தேகம் அவரிடமே இருந்தது. ஃபிட்னஸ் பிரச்சனை, காலில் செய்ய அறுவை சிகிச்சை பிரச்சனைகள் இருந்து வந்தன.
இந்த நிலையில் தோனியின் நெருங்கிய நட்பில் இருந்தவர்கள் மூலம் மைக்கேல் தளத்திற்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தற்போதைய சூழலில் தோனி முழுமையாக ஃபிட்னஸை எட்டி இருக்கிறார். அதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி சிஎஸ்கே அணிக்காக இம்பேக்ட் பிளேயராக சில போட்டிகளில் விளையாடுவார்.
வயது மற்றும் காயங்கள் இருப்பதால், வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே தோனி விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தோனி சிஎஸ்கே அணியால் குறைந்த தொகைக்கு தக்க வைக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தோனி ஒரு வீரர் ஐபிஎல் தொடரை விளையாடும் பட்சத்தில், ஒளிபரப்பாளர்களும் உற்சாகமடைவார்கள்.
சிஎஸ்கே அணியின் பிராண்ட் வேல்யூ-வும் குறையாமல் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் கேப்டன்சியில் ருதுராஜ் கெய்க்வாட் இன்னும் முன்னேற வேண்டிய தேவைகள் இருப்பதால், அவருடன் தொடர்ந்து தோனி பயணிக்கவும் இது சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுவதால், சிஎஸ்கே அணி நிர்வாகம் உற்சாகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.