மும்பை: ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி மீண்டும் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிடென்ஷன் பட்டியல் தொடர்பான ஆலோசனையின் போது ஆர்சிபி அணியின் உரிமையாளர்கள் விராட் கோலியை சமாதானம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆர்சிபி அணி, ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. கடந்த சீசனில் முதல் பாதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 2வது பாதியில் அபாரமாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. பயிற்சியாளர் ஆண்டி பிளவர் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இம்முறை ஆர்சிபி அணியின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ரீடென்ஷனில் ஆர்சிபி அணி எப்படி செயல்படும் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர். அந்த வகையில் நட்சத்திர வீரர் விராட் கோலி ரூ.18 கோடிக்கு ரீடெய்ன் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதேபோல் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருக்கும் டூ பிளசிஸ் 40 வயதை எட்டி இருப்பதால், புதிய கேப்டனை தேடும் பணியில் உறுதியாக இருக்கிறது.
ஆனால் புதிய கேப்டனை கொண்டு வரப்படுவதை விடவும், விராட் கோலியை சமாதானம் செய்ய திட்டமிடப்பட்டது. 2013 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி, 140 போட்டிகளில் தலைமையேற்று 66 போட்டிகளில் வெற்றியும், 70 போட்டிகளில் தோல்வியையும் அடைந்துள்ளார்.
சோசியல் மீடியாவில் ஏற்பட்ட கிண்டல் காரணமாக அழுத்தத்தை குறைக்க பதவியில் இருந்து விலகினார். இருந்தாலும் கடந்த சீசனில் டூ பிளசிஸ்-க்கு காய்ச்சல் ஏற்பட்ட போது 2 போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக கம்பேக் கொடுத்தார். அந்த 2 போட்டிகளிலும் ஆர்சிபி அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அதேபோல் விராட் கோலிக்கு 35 வயதாகுவதால், இளம் வீரர் ஒருவரை கேப்டனாக கொண்டு வந்தால், அவரை கையாள்வது எளிதாக இருக்காது. இதனால் விராட் கோலியிடம் கேப்டன்சியை ஏற்குமாறு அந்த அணியின் உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆண்டி பிளவர், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதனை விராட் கோலியும் ஏற்றுள்ளதாக சில தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆர்சிபி அணி நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மெகா ஏலத்திற்கு பின் வெளியிட அந்த அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விராட் கோலி மீண்டும் கேப்டனாக கம்பேக் கொடுக்கும் பட்சத்தில், அந்த அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஏனென்றால் கேப்டன்சியை ராஜினாமா செய்ததில் இருந்தே விராட் கோலியின் பேட்டிங் மற்றும் தீவிரத்தன்மை குறைந்தது. ஆனால் விராட் கோலிக்கு பொறுப்பை கொடுக்கும் பட்சத்தில், 2018ஆம் ஆண்டு எப்படி சிஎஸ்கே அணி கம்பேக் கொடுத்து கோப்பையை வென்றதோ, அதேபோல் ஆர்சிபி அணியும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.