டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து கேப்டன் ரிஷல் பண்ட் விலகியதற்கான காரனம் குறித்து தெரிய வந்துள்ளது. டெல்லி அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஜிஎம்ஆர் நிர்வாகம் தரப்பில் உச்சக்கட்ட ஊதியம் கொடுக்க முன் வந்த போது, ரிஷப் பண்ட் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி அணியின் ரீடென்ஷன் பட்டியலில் கேப்டன் ரிஷப் பண்ட் இல்லாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் டெல்லி அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்ட், 8 ஆண்டு கால பயணத்தை முடித்து கொண்டுள்ளார். 2021ஆம் ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகிய போது, புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் கொண்டு வரப்பட்டார்.

இருந்தாலும் அடுத்த 3 ஆண்டுகளில் ரிஷப் பண்ட் விலகியது ஏன் என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ தரப்பில் ரீடென்ஷன் செய்வதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்ட பின், கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் டெல்லி அணியின் உரிமையாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். துபாய், டெல்லி, மும்பை என்று பல்வேறு நகரங்களிலும் இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.
ஆனால் ஜிஎம்ஆர் நிறுவனம் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் தான் பிரச்சனையின் முதல் புள்ளியாக அமைந்துள்ளது. இரு நிறுவனங்களுக்கும் இடையில் டெல்லி அணியின் நிர்வாகப் பொறுப்பு ஒவ்வொரு 2 ஆண்டுக்கும் ஒருமுறை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் தொடர வேண்டும் என்று இரு தரப்பிலும் விரும்பியுள்ளனர்.
அதேபோல் ஆலோசனையின் போது ரிஷப் பண்ட் கேட்கும் ஒப்பந்தத்தை கொடுக்க இரு தரப்பும் முன் வந்துள்ளது. அதேபோல் டெல்லி அணியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் இருக்க வேண்டும் என்று ரிஷப் பண்ட் கோரியுள்ளார். அதற்கு இரு தரப்பு உரிமையாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் ஒப்புக் கொண்டபடி எந்த முடிவிலும் ரிஷப் பண்ட்-ன் ஆலோசனையோ, கருத்தோ கேட்கப்படவில்லை.
இதனால் ரிஷப் பண்ட் அவமரியாதை செய்யப்பட்டதாக உணர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து விலகும் முடிவிற்கு வந்திருக்கிறார். ஏனென்றால் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் நிர்வாகம் மாற்றப்படுவதையும் ரிஷப் பண்ட் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல் டெல்லி அணியில் இருந்து விலக ரிஷப் பண்ட் முடிவெடுத்த பின், அவரை பல்வேறு நிர்வாகங்களும் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் மெகா ஏலத்தில் பங்கேற்கவே விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதனால் ரிஷப் பண்ட் பஞ்சாப் அல்லது சிஎஸ்கே அணிகளுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாண்டிங் உடன் ரிஷப் பண்ட் பணியாற்றியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் பிராண்ட் வேல்யூ இருக்கும் வீரர் என்பதால், அவரை வைத்து அணியை கட்டமைக்கலாம் என்று அணி நிர்வாகங்கள் பார்க்கும். ரிஷப் பண்ட் விலகும் முடிவை எடுத்த பின், டெல்லி அணி நிர்வாகம் தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.