பெங்களூரு: ஐபிஎல் அமைப்பின் தலைமை ஆபரேட்டிங் அதிகாரியான சுந்தர் ராமன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை பிசிசிஐ ஏற்றுக் கொண்டுள்ளது.
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்தே சிஓஓவாக இருந்து வந்தவர் சுந்தர் ராமன் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 5ம் தேதி முதல் இவர் தனது பணியிலிருந்து விலகுகிறார்.
2013ம் ஆண்டு ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சையின்போது சுந்தர்ராமன் பெயரும் அடிபட்டது. அவர் பதவி விலக நெருக்குதல்களும் ஏற்பட்டன. இந்த சர்ச்சை தொடர்பாக பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகரும் கூட (பதவிக்கு வருவதற்கு முன்பு), ஏன் சுந்தர்ராமன் பதவியில் நீடிக்கிறார் என்று கேட்டிருந்தார்.

இதுகுறித்து கடந்த ஜூலை மாதம் மாதம் மனோகர் கூறுகையில், முத்கல் கமிட்டி அறிக்கையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பூர்வாங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதுமே சுந்தர்ராமன் பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால் அவர் தொடர்ந்து பதவியில் இருந்து வருகிறார். அவர் பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது மனோகர் தலைவராகியுள்ள நிலையில் அவரது அழுத்தம் காரணமாக சுந்தர்ராமன் விலகியிருப்பதாக தெரிகிறது. நேற்று நாக்பூரில் மனோகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளாராம் சுந்தர் ராமன்.