கவுகாத்தி: 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தொடர் வெற்றிகளால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வந்தாலும், தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த அணியின் மேலாளர் ரோமி பிந்தர், போட்டியின் போது வீரர்கள் அறையில் அமர்ந்து மொபைல் போன் பயன்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் விதிகளின்படி சந்தேகத்திற்குரிய குற்றம் ஆகும். மேட்ச் பிக்ஸிங் போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கவே இந்த விதி ஏற்படுத்தப்பட்டது. அதை தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் மீறி இருக்கிறார்.
கவுகாத்தியில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது இந்த விதிமீறல் அரங்கேறியது. ராஜஸ்தான் அணி இலக்கை துரத்தி விளையாடிக் கொண்டிருந்த போது, 11-வது ஓவரில் கேமராக்கள் ராஜஸ்தான் அணியின் வீரர்கள் அறையை படம் பிடித்தன. அப்போது மேலாளர் ரோமி பிந்தர் தனது மொபைல் போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் அந்த மொபைல் திரையை எட்டிப் பார்ப்பது கேமராவில் தெளிவாகப் பதிவானது.

ஐபிஎல் தொடரில் வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் தங்கும் பகுதி (PMOA) தொடர்பான விதிகள் மிகவும் கடுமையானவை. இதன்படி, போட்டி நடைபெறும் போது வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் மொபைல் போன் பயன்படுத்த அனுமதி இல்லை. மைதானத்திற்குள் நுழையும் போதே அவர்கள் தங்களது மின்னணு சாதனங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
எனினும், அணியின் மேலாளருக்கு மட்டும் சில விலக்குகள் உண்டு. அவர் தனது மொபைல் போனை 'டிரெஸ்ஸிங் ரூம்' எனப்படும் வீரர்கள் உடை மாற்றும் அறையில் பயன்படுத்த அனுமதி உண்டு. ஆனால், எக்காரணம் கொண்டும் மைதானத்தின் எல்லையை ஒட்டி 'டக் அவுட்' எனும் வீரர்கள் அமரும் பகுதியில் மொபைல் போனைப் பயன்படுத்தக் கூடாது என்பது விதி.
ரோமி பிந்தரின் இந்தச் செயல் ஐபிஎல் விதிமுறைகளை மீறிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஐபிஎல் போட்டி நடுவர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐசிசி) இணைந்த ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவு (ACSU) விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விதிமீறல் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட மேலாளருக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சில போட்டிகளில் பங்கேற்க தடை (சஸ்பெண்ட்) விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது அபார ஆட்டத்தால் செய்திகளில் இடம்பிடித்து வரும் நிலையில், மேலாளரின் இந்த கவனக்குறைவான செயல் அந்த அணிக்கு ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது. பிசிசிஐ இது தொடர்பாக என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.