பெங்களூர்: ஐபிஎல் போட்டிகளில் 6 அணிகளின் கேப்டன்களாக உள்ளவர்கள், இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். அதே நேரத்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் விளையாடும் 8 அணிகளில் ஹைதராபாத் அணியின் கேன் வில்லியம்சனைத் தவிர மற்ற 7 அணிகளுக்கும் இந்தியர்களே கேப்டன்களாக உள்ளனர்.
ஐபிஎல் தொடருக்குப் பிறகு, இந்திய அணி இங்கிலாந்து செல்ல உள்ளது. ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி-20 போட்டிகள் மர்றும் அதைத் தொடர்ந்து, ஜூலையில் இருந்து இங்கிலாந்து தொடர் துவங்குகிறது. இதற்கான இந்திய அணிகள் இன்று அறிவிக்கப்பட்டன.
அதன்படி பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, மும்பையின் ரோஹித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி, கொல்கத்தாவின் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 மற்றும் ஒருதினப் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். டெல்லியின் இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஒருதினப் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஆனால் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் இதில் இடம்பெறவில்லை. பெங்களூருவில் ஜூன் மாதம் நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்படவில்லை. அதில் அவர் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.