துபாய் : ஐபிஎல் 2020 தொடர் அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடைபெறவுள்ளது.
அபுதாபியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில், அங்கு செல்லும் அணி வீரர்கள் குவாரன்டைனில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் போட்டிகளுக்காக பயணம் மேற்கொள்ளும் அணி வீரர்கள் நேரிடையாக ஹோட்டல்களுக்கோ அல்லது மைதானங்களுக்கோ செல்லலாம் என்றும் அவர்களுக்கு குவாரன்டைன் அவசியம் இல்லை என்றும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 2020 தொடர் வரும் 19ம் தேதி துவங்கி நவம்பர் 10ம் தேதிவரை நடைபெறவுள்ளது. போட்டிகளில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள 8 அணிகளின் வீரர்களும் 6 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபட்டனர். இந்நிலையில் அபுதாபியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுவதால் அங்கு நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்னதாக குவாரன்டைனில் ஐபிஎல் அணி வீரர்கள் ஈடுபட வேண்டும் என்று கூறப்பட்டது.
இதனிடையே, அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெறும் இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக பயணம் மேற்கொள்ளும் அணி வீரர்கள் குவாரன்டைனில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என்று எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அவர்கள் நேரிடையாக மைதானத்திற்கோ அல்லது தாங்கள் தங்கவுள்ள ஹோட்டல்களுக்கோ செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கென தேவையான முன்னனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வெளியில் இருந்து வருபவர்களே குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் ஏற்கனவே பயோ பபள் முறையில் பாதுகாப்பாக இருக்கும் வீரர்களுக்கு குவாரன்டைன் அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.