சிஎஸ்கே கைவிடப்போகும் வீரர்கள் யார்? பிசிசிஐ செக்.. உலககோப்பை முடிவதற்கும் வீரர்களை தேடி வரும் ஆப்பு
சென்னை: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடருக்காக தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாக குழு அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்க் மாதம் தொடங்கி மே மாதத்தில் முடிவடையும். ஒரு கோப்பைக்காக 10 அணிகளில் உலகம் முழுவதும் உள்ள 250 வீரர்கள் போட்டிபோடுவார்கள். இதனால் இந்தியா மட்டுமல்லாமல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமை மட்டும் விண்ணை தொடும் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சி உரிமை மட்டும் ரூ.48,390 கோடிக்கும், ஓடிடி ஒளிபரப்பு உரிமை ரூ. 23,758 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு ஐபிஎல் தொடரின் வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது.
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் முதல் மே மாதம் வரை நடக்கவுள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் மாதம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடத்தப்பட்டு வந்த நிலையில், இம்முறை துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் டிசம்பர் 9ஆம் தேதி மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகளின் ஏலமும், டிசம்பர் 15 முதல் 19 ஆகிய 5 நாட்களுக்குள் ஐபிஎல் வீரர்களுக்கான ஏலமும் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் அணிகளுக்கான பர்ஸ் தொகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் கூடுதலாக ரூ.5 கோடி வரை செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒவ்வொரு அணிகளும் செலவு செய்யும் பர்ஸ் தொகை ரூ.100 கோடியாக இருக்கும். மேலும் ஒவ்வொரு அணிகளும் ரீடெய்ன் செய்த வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகக்கோப்பை இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக சில வீரர்களை அணிகள் கழற்றிவிடவுள்ளது.
சிஎஸ்கே அணி தரப்பில் தென்னாப்பிரிக்கா வீரர் சிசண்டா மகளா, பென் ஸ்டோக்ஸ், கைல் ஜேமிசன், ஷேக் ரஷீத், டுவைன் ப்ரிட்டோரியஸ் உள்ளிட்ட வீரர்கள் கழற்றிவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அம்பாதி ராயுடு ஓய்வை அறிவித்துள்ளதால், அவர் நிச்சயம் கழற்றிவிடப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications