சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆர் சி பி அணியுடன் பல பரிட்சை நடத்துகிறது.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் முதலில் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் தான் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு எஞ்சி உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை பிசிசிஐயால் வெளியிடப்படும்.

இந்த நிலையில் சென்னையில் வரும் மார்ச் 22 ஆம் தேதி சி எஸ் கே ஆர் சி பி அணியும், வரும் மார்ச் 26 ஆம் தேதி குஜராத்,சிஎஸ்கே அணியும் மோதுகிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை எவ்வாறு பெறலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். கடந்த சீசனின் போது டிக்கெட் விற்பனையில் குளறுபடி ஏற்பட்டதாக புகார் இருந்தது.
இதனால் போட்டியை காண முடியவில்லை என்று சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் மைதானத்திற்கு நேராக சென்று டிக்கெட் வாங்குவதற்கு மிகவும் கடினமாக இருப்பதால் அனைத்து டிக்கெட்டுகளுமே ஆன்லைனில் விற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர்.
இதன் அடிப்படையில் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் அனைத்து போட்டிகளும் ஆன்லைனில் விற்கப்படும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக பேடிஎம் இன்சைடர் ஆப்பை பதிவிறக்கம் செய்து கொண்டு எப்படி சினிமா டிக்கெட்டிற்கு நாம் இருக்கைகளைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்வோமோ, அதேபோல் இங்கு நாம் மைதானத்தில் எங்கு உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்ற மேப்பை பார்த்து இருக்கைகளை பதிவு செய்யலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் தங்களுடைய டிக்கெட் விற்பனையை தொடங்கவில்லை. ஆப் இல்லை என்றாலும் இந்த இணையதளத்தில் https://insider.in/ipl-indian-premier-league/schedule சென்று சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்டை புக் செய்து கொள்ளலாம். பெரும்பான்மையான ஐபிஎல் போட்டிகளுக்கு பேடிஎம் இன்சைடர் ஆப் மற்றும் இணையதளத்தில் தான் புக் செய்து கொள்ளலாம் என்பதால் டிக்கெட் விற்பனையில் வெளிப்படை தன்மை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் டிக்கெட் விலை குறைந்தபட்சமே 799 ரூபாயாக இருக்கலாம்.
ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. பெரும்பான்மையான டிக்கெட்டுகளை பிளாக் செய்து விட்டு சில டிக்கெட்டுகளை மட்டும் ஆன்லைனில் விற்கக் கூடாது என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளுமே முழுமையும் ஆன்லைனில் வந்தால் மட்டுமே இந்த திட்டம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.