
காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல்
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் 2020 போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சர்வதேச அளவில் முடங்கியிருந்த கிரிக்கெட் போட்டிகள், கடந்த 8ம் தேதி இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கிடையில் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற போதிலும் இந்த துவக்கம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யூஏஇயில் துவக்கம்
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலக கோப்பை தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கால அட்டவணையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 26ம் தேதி துவங்கி நவம்பர் 8ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும் என்றும் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில், யூஏஇயில் நடத்தப்படும் என்றும் பிசிசிஐ சார்பில் கூறப்பட்டது.

நவம்பர் 8ல் இறுதிப்போட்டி
வரும் டிசம்பர் 3ம் தேதி இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் டெஸ்ட் தொடருக்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது, ஐபிஎல் போட்டிகளை ஒருவாரம் முன்னதாக செப்டம்பர் 19ம் தேதியே துவக்க திட்டமிட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். இந்த தொடர் மொத்தமாக 51 நாட்கள் நடைபெறும் என்றும் இறுதிப்போட்டி நவம்பர் 8ம் தேதி நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

இறுதி செய்யப்படும் அட்டவணை
இந்த அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் அடுத்த வாரத்தில் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் கூடவுள்ள நிலையில், இந்த அட்டவணை குறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த அட்டவணை குறித்து எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கும் முறையான தகவல் அளிப்பட்டுள்ளதாகவும் பிரிஜேஷ் மேலும் கூறினார்.

பயிற்சியில் ஈடுபடும் ஐபிஎல் அணிகள்
இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக வரும் ஆகஸ்ட் 20ம் தேதியே யூஏஇக்கு ஐபிஎல்லின் 8 அணிகளும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், தனித்தனியாக பயிற்சிகளில் ஈடுபட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். துபாய் சர்வதேச மைதானம், சேயிக் சையத் மைதானம் மற்றும் ஷார்ஜா மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என்றும் பயிற்சிகள் ஐசிசி அகாடமியின் மைதானங்களில் நடைபெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications











