ஜெய்ப்பூர்: ஒருபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அணியை விட்டு வெளியேற விரும்புவதாக செய்திகள் பரவி வருகின்றன. மறுபுறம், அதே அணியின் இளம் வீரரான துருவ் ஜுரலை "கேப்டன்" எனக் குறிப்பிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருப்பது, கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
இது வெறும் தற்செயலான வாழ்த்து தானா அல்லது சஞ்சு சாம்சனின் விலகலுக்குப் பின்னணியில் ஏதேனும் சூசகம் உள்ளதா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்திய கிரிக்கெட்டில் அசுர வளர்ச்சி கண்டு வரும் இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான துருவ் ஜுரல், துலீப் டிராபி தொடருக்கான மத்திய மண்டல (Central Zone) அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது நிதானமான ஆட்டம் மற்றும் அபாரமான விக்கெட் கீப்பிங் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 23 வயதான ஜுரலுக்கு, இந்த கேப்டன் பதவி அவரது கிரிக்கெட் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
தனது இளம் வீரரின் இந்த புதிய சாதனையை கொண்டாடும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது சமூக வலைதளப் பக்கத்தில், "Ek hoga jo stumps ke peeche se game badal dega" (ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து ஆட்டத்தையே மாற்றக்கூடிய ஒருவர் இருப்பார்) என்ற தலைப்புடன் ஜுரலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது.
சாதாரணமாகப் பார்த்தால், இது ஒரு வீரருக்கு அவரது ஐபிஎல் அணி தெரிவிக்கும் ஒரு வழக்கமான வாழ்த்துச் செய்திதான். ஆனால், இந்தப் பதிவு வெளியான நேரம்தான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியுடனான கருத்து வேறுபாடு காரணமாக அணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரியதாக செய்தி வெளியான 12 மணி நேரத்திற்குள், ராஜஸ்தான் அணி இந்தப் பதிவை வெளியிட்டது. இதுதான் தற்போது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சஞ்சு சாம்சன் குறித்த செய்திகளுக்கு இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. மேலும், அவர்கள் ஜுரலுக்காக வெளியிட்ட பதிவிலும் சாம்சன் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. ஆனாலும், அணியின் தற்போதைய விக்கெட் கீப்பர்-கேப்டன் வெளியேறப் போவதாக செய்தி வந்தவுடன், மற்றொரு இளம் விக்கெட் கீப்பரை முன்னிலைப்படுத்தி "கேப்டன்" என வாழ்த்துவது, திட்டமிடப்படாமல் நடந்திருந்தாலும், பல கேள்விகளை எழுப்புகிறது.
"சாம்சன் போனால் என்ன? எங்களிடம் அடுத்த கேப்டன் தயாராக இருக்கிறார்" என்று ராஜஸ்தான் அணி மறைமுகமாக ஒரு செய்தியை அனுப்புகிறதா? என கிரிக்கெட் ஆய்வாளர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில், துருவ் ஜுரல் ஒரு பலம் வாய்ந்த மத்திய மண்டல அணிக்கு தலைமை தாங்க உள்ளார். இந்த அணியில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்காத குல்தீப் யாதவ், ரஞ்சி டிராபியில் 69 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஹர்ஷ் துபே மற்றும் கலீல் அகமது, தீபக் சாஹர் போன்ற முன்னணி வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
சஞ்சு சாம்சன் விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மௌனமும், அதே நேரத்தில் துருவ் ஜுரலை முன்னிலைப்படுத்தும் பதிவும், ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்பாகவே ராஜஸ்தான் அணியில் ஒரு பெரிய மாற்றம் நிகழப்போவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. இந்த அமைதிக்குப் பின்னால் புயல் வீசுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.