மும்பை: கிரிக்கெட் உலகத்தில் வீரர்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நடுவர்களின் பங்கும் அத்தியாவசியமானது. ஒரு சிறிய தலறு நடந்தாலும், அது ஆட்டத்தின் முடிவையே மாற்றிவிடும் என்பதால், நடுவர்களின் பணி மிகவும் சவாலானது. வீரர்கள் பெறும் சம்பளத்தை ஒப்பிடும்போது நடுவர்களின் வருவாய் குறைவாக இருப்பினும், சர்வதேச டி20 போட்டிகளுக்கான அவர்களின் ஊதியத்தை ஓப்பிடும் போது ஐபிஎல் தொடருக்கு ஊதியம் மிகவும் அதிகம்.
2025-2026 ஐபிஎல் சீசனுக்கான கள நடுவர் ஒரு போட்டிக்கு ₹3 லட்சம் பெறுகிறார். நான்காவது நடுவர் மற்றும் டிவி/மூன்றாம் நடுவர் தலா ₹2 லட்சம் சம்பாதிக்கின்றனர். இதில், ஐசிசி எலைட் நடுவர்கள் ஒரு போட்டிக்கு சுமார் ₹3.7 லட்சம் வரை பெறலாம், இதில் பிளேஆஃப் போனஸ்களும் அடங்கும்.

ஒரு ஐபிஎல் சீசனில் 12 முதல் 14 போட்டிகளில் நடுவராகப் பணியாற்றினால், ஒரு நடுவர் ₹24 லட்சம் முதல் ₹45 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். இது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட போட்டிகள் மற்றும் பிளேஆஃப் பணிகளைப் பொறுத்தது. ஆனால், சர்வதேச டி20 போட்டிகளில் இது சற்றுக் குறைவு. ஒரு டி20 சர்வதேசப் போட்டிக்கு ₹1.13 லட்சம் முதல் ₹1.25 லட்சம் வரை கட்டணம் வழங்கப்படுகிறது. இது போட்டி நடத்தும் வாரியங்கள் அல்லது ஐசிசி மூலம் செலுத்தப்படும். இதில் தினசரி படிகளும் அடங்கும்.

சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து நடுவராகப் பணியாற்றும் எலைட் நடுவர்கள் கூட ஐபிஎல் போட்டிக்கு ஈடாக டி20 சர்வதேசப் போட்டிகளில் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். ஐபிஎல் போட்டிகளில் கள நடுவர்களுக்கு ₹3 லட்சம் வழங்கப்படும் நிலையில், டி20 சர்வதேசப் போட்டிகளில் இது சுமார் ₹1.13 முதல் ₹1.25 லட்சம் மட்டுமே. இது ஐபிஎல் சம்பளத்தை டி20ஐயை விட கிட்டத்தட்ட 2.5 முதல் 3 மடங்கு அதிகமாக ஆக்குகிறது.
ஐபிஎல் நடுவர்களுக்கு ஏன் இவ்வளவு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. உலகின் மிகவும் பணக்கார கிரிக்கெட் லீக்கான ஐபிஎல், பெரிய ஒளிபரப்பு ஒப்பந்தங்கள், ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் நிரம்பிய ஸ்டேடியங்கள் மூலம் பெரும் நிதி பலத்தைக் கொண்டுள்ளது. இதனால், பிசிசிஐயை அதிக அளவில் ஊதியம் வழங்க முடிகிறது. மேலும், ஐபிஎல் போட்டிகளில் டிஆர்எஸ், அல்ட்ராஎட்ஜ், பால் டிராக்கிங் போன்ற தொழில்நுட்பங்களுடன் தீவிர கண்காணிப்பும், அதிக பார்வையாளர் அழுத்தமும் இருப்பதால், சர்வதேச டி20 போட்டிகளை விடச் சவாலானது.
ஐபிஎல் தொடர் உலகின் சிறந்த ஐசிசி எலைட் பேனல் நடுவர்களை ஈர்ப்பதற்கும், நடுவர் தரத்தை உறுதி செய்வதற்கும் அதிக ஊதியம் முக்கியப் பங்காற்றுகிறது. வெளிநாட்டுப் போட்டிகளை ஒப்பிடும்போது, பிசிசிஐயின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் நடுவர் கட்டணம் மிகக் குறைவாகவே உள்ளது. ஒரு பெரிய சிவப்பு பந்து டெஸ்ட் போட்டிக்கு அதிகபட்சமாக ₹1.2-₹1.6 லட்சம் வரையும், டி20/பட்டியல் A போட்டிகளுக்கு ₹50,000-₹60,000 வரையும் நடுவர்களுக்குக் கிடைக்கிறது.

ஐபிஎல் மூலம் ₹24-₹45 லட்சம் வரையும், சர்வதேச போட்டிகளில் (ஐசிசி பேனல்) ₹60 லட்சம் முதல் ₹1.7 கோடி வரையும், உள்நாட்டுப் போட்டிகளில் ₹10-₹20 லட்சம் வரையும் ஒரு வருடத்திற்கு சம்பாதிக்கின்றனர். பல சிறந்த நடுவர்கள் பல்வேறு வடிவங்களில் பணியாற்றுவதன் மூலம் ஆண்டுக்கு கோடியில் வருமானம் ஈட்டுகின்றனர். நவீன கிரிக்கெட்டில் ஐபிஎல் வீரர்களுக்கு மட்டுமல்ல, நடுவர்களுக்கும் ஒரு வலுவான நிதி மையமாகத் திகழ்கிறது என்பதை இது தெளிவாகக் காட்டுகின்றன.