மும்பை: சஞ்சு சாம்சன் கொடுத்த பேட் மூலமாகவே 35 பந்துகளில் சதம் விளாசியதாக இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சனிடம் தொடர்ச்சியாக பேட் கேட்டுக் கொண்டே இருந்ததாக கூறிய வைபவ் சூர்யவன்ஷி, அந்த பேட் தனது அதிர்ஷ்டமான பேட் என்றும் தெரிவித்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் ஜெர்சி அணிந்து சஞ்சு சாம்சன் விளையாட உள்ளார். 11 ஆண்டுகளாக ராஜஸ்தான் அணிக்காக ஆடிய சஞ்சு சாம்சன், கடந்த 5 சீசன்களாக கேப்டனாக செயல்பட்டார். சஞ்சு சாம்சன் கேப்டனாக செயல்பட்ட பின், ராஜஸ்தான் அணியின் பங்குகள் உச்சத்திற்கு சென்றது. ஆனால் ராஜஸ்தான் அணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது விலகி இருக்கிறார்.

இந்த நிலையில் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறி இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு அந்த அணியின் இளம் வீரர்கள் பலரும் பிரியாவிடை கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே துருவ் ஜுரெலின் இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷி சஞ்சு சாம்சனுக்கு பிரியாவிடை கொடுத்துள்ளார்.
அப்போது வைபவ் சூர்யவன்ஷி பேசும் போது, ராஜஸ்தான் அணியில் இணைந்த சிறுவனாகவே இருந்தேன், இப்போதும் இருக்கிறேன்.. என்னுடைய முதல் கிட் பேக் 5 வயதில் கிடைத்தது. வழக்கமாக கிரிக்கெட் வீரர்கள் ஒரு கிட் பேக்கை தான் வைத்திருக்கிறார். ஆஆல் என்னிடம் 2 கிட் பேக் இருக்கிறது. கிளவ்ஸ், ஹெல்மட், பேடுகள் உள்ளிட்டவை ஒரு பேக்கில் இருக்கும்.
மற்றொரு பேக்கில் பேட்களை மட்டுமே வைத்திருப்பேன். அப்படியான ஒரு பேட் தான் சஞ்சு சாம்சன் கொடுத்தது. சஞ்சு சாம்சனிடம் எப்போது பார்த்தாலும் ஒரு பேட் பரிசாக கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். சில நாட்களுக்கு பின் சஞ்சு சாம்சன் ஒரு பேட்டினை பரிசாக கொடுத்தார். அந்த பேட்டில் ஆடிய போதுதான் குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் என்னால் சதம் அடிக்க முடிந்தது.
அந்த பேட் எனக்கு ராசியான பேட்டாக அமைந்தது. சஞ்சு சாம்சன் அண்ணா ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறுவது சோகம் தான்.. இருந்தாலும் அவருடன் பயணம் அடுத்த உயரங்களை அடையும் என்று தெரிவித்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷியின் இந்த வார்த்தைகள் ரசிகர்களிடையே டிரெண்டாகி வருகிறது.