டெல்லி: இந்தியாவிடம் எத்தனை முறை அடி வாங்கினாலும் திருந்தாத பாகிஸ்தான், தற்போது ஐபிஎல் தொடருடன் போட்டி போடும் வகையில், 2025 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் நடத்தப்படும் தேதிகளிலேயே 2025 பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை நடத்த உள்ளது.
முன்னதாக 2025 ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படாத வெளிநாட்டு வீரர்களை எல்லாம் தங்கள் பக்கம் வளைத்துப்போட்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை நடத்தி வந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு. இதற்கிடையேதான் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ச் சூழல் உருவானது.

அப்போது, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தை ஒட்டிய பகுதிகளில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. இதைக் கண்டு பயந்துபோன பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரைத் தற்காலிகமாக நிறுத்தி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (UAE) தொடரைக் கொண்டு செல்வதாக அறிவித்தது.
ஆனால், பிசிசிஐ-யின் முன்னாள் செயலாளரும், தற்போதைய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷாவின் நட்பை பெரிதும் மதிக்கும் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தங்கள் நாட்டில் நடத்த அனுமதிக்கவில்லை. இதையடுத்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையின்றி நிறுத்தப்பட்டது.
இப்படித் தொடர்ச்சியாகப் பின்னடைவுகளைச் சந்தித்து வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தற்போது மீண்டும் ஐபிஎல் உடன் போட்டி போடுவது என முடிவு எடுத்து ஒரு வேலையைச் செய்துள்ளது. ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் மே 17 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நாளில் நாங்களும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரைத் தொடங்குவோம் என வீம்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, மே 17 முதல் மே 25 வரையிலான காலகட்டத்தில் எஞ்சிய பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், இந்திய ராணுவம் தாக்கியதாகக் கூறப்படும் ராவல்பிண்டி மைதானத்திலேயே போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவைச் சீண்டும் வேலைகளைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடங்கியிருக்கிறது.
ஆனால், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இனி வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய போது அதிக பாதிப்பைச் சந்தித்தது பாகிஸ்தான் தான். பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
பாகிஸ்தானின் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன. அதனால், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இந்தியாவில் அதுபோல எந்தச் சூழ்நிலையும் இல்லை.
ஜம்மு காஷ்மீரைத் தாண்டி, வேறு எங்குமே பெரிய தாக்குதல் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்திய ராணுவம் சிறப்பாகச் செயல்பட்டு, பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தடுத்து நிறுத்தி வீழ்த்தியது. மேலும், ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாகத் தங்கள் நாடுகளுக்கும், அருகாமை நாடுகளுக்கும் சென்றனர்.
தற்போது, பல அணிகளைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் மாலத்தீவு, சிங்கப்பூர், துபாய் போன்ற நகரங்களில் தங்கள் விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மே 17 அன்று மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வந்துவிடுவார்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர்கள் மட்டுமே சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. இதைத் தாண்டி, ஐபிஎல் தொடருக்கு வெளிநாட்டு வீரர்கள் வருகையால் பெரிய பாதிப்பு இல்லை.
ஆனால், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்றிருந்த பல வெளிநாட்டு வீரர்கள், பாகிஸ்தானை விட்டு வெளியே செல்ல முடியாததால் அதிர்ச்சி அடைந்து அழுததாகச் சில செய்திகள் வெளியாகி இருந்தன. மேலும், வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானின் ராணுவத் தளத்திலிருந்து கிளம்பிச் சென்றவுடன், அந்த இடத்தில் இந்திய ராணுவம் தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இதனால், பாகிஸ்தானுக்குப் பல வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் வரமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இப்போது மட்டுமல்ல, அடுத்த சில ஆண்டுகளுக்கு வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானுக்குச் செல்வது சந்தேகமே எனவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், வீம்புக்குப் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை, ஐபிஎல் மீண்டும் தொடங்கும் அதே மே 17 அன்று நடத்தப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.