கொல்கத்தா: நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அட்டகாசமாக வீழ்த்தியது. இன்னொரு போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் சுருட்டியது.
கொல்கத்தாவில் நடந்த போட்டியில் இரு தரப்புமே விறுவிறுப்பான பேட்டிங்கை வெளிக்காட்டின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கங்குலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அவரும், கெயிலும் இணைந்து அட்டகாசமான தொடக்கத்தைக் கொடுத்தனர். குறிப்பாக கங்குலி அபாரமாக ஆடினார். 46 பந்துகளில் 56 ரன்களைக் குவித்தார். கெயில், 21 பந்துகளில் 40 ரன்களைக் குவித்தார். பின்னர் வந்தவர்களில் மாத்யூஸ் அட்டகாசமாக ஆடி 28 பந்துகளில் 46 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இளம் வீரர் திவாரியும் 18 பந்துகளை மட்டுமே சந்தித்து 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கொல்கத்தா அணி பெரிய ஸ்கோரை எட்டியிருக்க வேண்டும். இடையில் சற்று தொய்வு ஏற்பட்டதால் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை அது எடுத்தது.
கடினமான வெற்றி இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே சொதப்பலாக இருந்தது. வேகப் பந்து வீச்சாளர் திண்டாவின் மாஜிக்கில் சிக்கி அதிரடி வீரர் வார்னர் வீழ்ந்தார். ஐந்து பந்துகளை சந்தித்த வார்னர் முதல் நான்கு பந்துகளில் கடுமையாக தடுமாறினார். ஐந்தாவது பந்தில் போல்டானார்.
ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த ஷேவாக்கும், கம்பீரும் கலக்கி விட்டனர். இருவரும் சரமாரியாக பவுண்டரிகளையும், சிக்சர்களையும் வீசி டெல்லி அணிக்கு நல்ல பூஸ்ட் கொடுத்தனர்.
கம்பீர் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகி விட்டார். மறு முனைனையில், ஷேவாக் 64 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
இந்த இருவரும் பிரிந்தது, டெல்லிக்குப் பெரும் சரிவைக் கொடுத்த்து. பின்னர் வந்தவர்களில் திணேஷ் கார்த்திக் மட்டும் சிறப்பாக ஆடி 20 ரன்களைக் குவித்தார். ஆனால் மற்றவர்கள் ஒற்றை இலக்கத்துடன் திரும்பியதால் டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலம்ம் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோல்வியடைந்தது. கங்குலியின் அபாரமான பேட்டிங், கேப்டனாக திறம்பட செயல்பட்டது, பீல்டிங் மற்றும் பவுலிங் வியூகம் கொல்கத்தாவுக்கு நேற்று சிறப்பான வெற்றியைத் தேடித் தந்த்து.
வழக்கம் போல பஞ்சாப் தோல்வி
முன்னதாக ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் வழக்கம் போல கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவியது. இந்த முறை அது ராஜஸ்தானிடம் வீழ்ந்த்து.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்தது.
மஹிளா ஜெயவர்த்தனே சிறப்பாக ஆடி 44 ரன்கள் குவித்தார். யுவராஜ் சிங் 28, இர்பான் பதான் 24 ரன்கள் எடுத்தனர். பிஸ்லா வேகமாக ஆடி எடுத்த ரன்கள் 20.
ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சும், பீல்டிங்கும் அபாரமாக இருந்த்து. பின்னர் ஆடிய ராஜஸ்தான் இந்த இலக்கை 15 ஓவர்களிலேயே எட்டி வெற்றியைத் தொட்டது. லம்ப் அதிரடியாக ஆடி 83 ரன்களைக் குவிக்க, ஓஜா பிரமாதமாக ஆடி 44 ரன்களைச் சேர்க்க, யூசுப் பதான் வழக்கம் போல அதிரடியாக ஆடி 21 ரன்களை எடுக்க, ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 15 ஓவர்களில் 157 ரன்களை எடுத்தது ராஜஸ்தான்.
மைக்கேல் லம்ப் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்றைய போட்டியில், பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஒரு சிக்கலில் மாட்டினார். ரன்களை வாரிக் கொடுத்து வந்த்தால் விரக்தியில் இருந்த ஸ்ரீசாந்த், இரண்டு நோ பால்களைப் போட்டதால் டென்ஷனாகி நடுவர்களைப் பார்த்து கைதட்டி கேலி செய்தார்.
அத்தோடு நில்லாமல் தனது நோ பாலில் பவுண்டரி அடித்த மைக்கேல் லம்ப்பைப் பார்த்தும் கை தட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த செயலால் அதிருப்தி அடைந்த யுவராஜ் சிங், ஸ்ரீசாந்திடம் சென்று அவரைக் கண்டித்தார்.
கடந்த அக்டோபர் மாதம்தான் ஸ்ரீசாந்த்துக்கு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கடுமையாக எச்சரித்திருந்த்து. மீறினால் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாட முடியாமல் தடை செய்யப்படுவீர்கள் என்றும் கூறப்பட்டிருந்த்து.
இந்த நிலையில், நடுவர்களைக் கேலி செய்து சிக்கியுள்ளார் ஸ்ரீசாந்த். அவருக்க இதற்காக கடும் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.