ஈரான் இஸ்ரேல் போர் பதற்றத்தால், டி20 உலககோப்பைக்கு சிக்கல் வருமா? ஐபிஎல் போல் ஒத்திவைக்கப்படுமா?
மும்பை: உலக நாடுகளுக்கு இடையே போர் நடைபெறும் போது, அது விளையாட்டு துறையையும் சேர்த்து பாதிக்கிறது. உலகப் போர் நடந்த சமயத்தில் ஒலிம்பிக் போட்டிகள் கூட நடத்தப்படுவது கிடையாது. புகழ்மிக்க ஆசஸ் கிரிக்கெட் போட்டிகளும் உலகப் போர் சமயத்தில் ரத்து செய்யப்பட்டது.
அவ்வளவு ஏன், 2025 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உருவான நிலையில், ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியோர் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு ஈரானும் பதிலடி தரும் விதமாக மற்ற வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க போர் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடு முழுவதும் கடும் பதற்றம் நிலவுகிறது. வான்வெளிகள் மூடப்பட்டு இருக்கின்றது. விமான நிலையங்கள் செயல்படவில்லை. இந்த தருணத்தில் கடந்த முறை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது போல் டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஒத்திவைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் போர் நடக்கும் இடத்திலிருந்து மிக தூரத்தில் டி20 உலக கோப்பை நடைபெறுவதால் கிரிக்கெட் போட்டிகளுக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும். இதுவே உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு இந்த போர் நிகழ்ந்திருந்தால் பல வெளிநாட்டு அணிகள் இந்தியா வர சிக்கலாக இருந்திருக்கும்.
விமான நிலையங்கள் மற்றும் வான்வெளி பகுதிகள் மூடப்பட்டு இருப்பதால் வீரர்கள் வந்திருக்க இயலாது. அப்போது டி20 உலக கோப்பை நிச்சயம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது தொடர் முடியும் தருவாயில் உள்ளது. அனைத்து அணி வீரர்களும் இந்தியாவிலே உள்ளனர் என்பதால் போட்டி நடைபெறுவதில் எந்த பிரச்சனையும் கிடையாது.
ஒருவேளை சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இந்த போரில் பங்கேற்றால் அது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும். ஆனால் அதற்கு எல்லாம் வாய்ப்பே கிடையாது என்பதால் ரசிகர்கள் கவலை கொள்ள வேண்டாம்.


Click it and Unblock the Notifications