லக்னோ: 2024 இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி விளையாடி வருகிறது. ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக பேட்டிங் செய்த அபிமன்யு ஈஸ்வரன் முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி சதம் அடித்தார். இதை அடுத்து அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் மாற்று துவக்க வீரராக வாய்ப்பு கிடைக்கும் என்ற பேச்சு எழுந்தது.
2024 இரானி கோப்பை போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி முதல் இரண்டு நாட்கள் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 537 ரன்கள் குவித்தது. சர்ஃபராஸ் கான் 222 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் அபாரமாக பேட்டிங் செய்த அபிமன்யு ஈஸ்வரன் 151 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். அவர் நான்காம் நாள் ஆட்டத்தில் இரட்டை சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தான் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய டெஸ்ட் அணியில் மாற்று துவக்க வீரராக வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதற்குள் அபிமன்யு ஈஸ்வரன் அடித்த சதம் அதற்கு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது. அபிமன்யு ஈஸ்வரன் இரானி கோப்பை போட்டிக்கு முன் ஆடிய கடைசி ஐந்து உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ரன் குவித்து இருக்கிறார்.
2023 - 24 ரஞ்சி ட்ராபி தொடரில் பெங்கால் அணிக்காக ஆடிய அவர் அந்த தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் மட்டும் மூன்று இன்னிங்ஸில் 337 ரன்கள் சேர்த்திருந்தார். அடுத்து துலீப் ட்ராபி தொடரின் இரண்டாவது போட்டியில் 157 ரன்கள் அடித்திருந்தார். மூன்றாவது போட்டியில் 116 ரன்கள் அடித்திருந்தார். இரானி கோப்பை டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த ஐந்து போட்டிகளில் மூன்று சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடித்திருக்கிறார்.
அதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும். இதை அடுத்தே அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் இதுவரை 97 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7315 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 48 ஆகும். 25 சதம் மற்றும் 29 அரை சதங்களை அடித்திருக்கிறார். இதை அடுத்து ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ருதுராஜ் இந்திய அணியுடன் மாற்று துவக்க வீரராக பயணம் செய்வார் என கூறப்பட்டு வந்தது. ஆனால், சிறப்பாக ஆடும் துவக்க வீரர் அபிமன் ஈஸ்வரனை விட்டுவிட்டு ருதுராஜை தேர்வு செய்தால் அதனால் கடும் விமர்சனத்தை பிசிசிஐ சந்திக்க வேண்டி இருக்கும்.
அதே சமயம் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு நீண்ட காலமாக வாய்ப்பு அளிக்காமல் இப்போது அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு அளித்தால் அதையும் ரசிகர்கள் விமர்சனம் செய்வார்கள். இந்த இருவரில் யாரை தேர்வு செய்வது என்பதில் பிசிசிஐ, தேர்வுக் குழு மற்றும் இந்திய அணி நிர்வாகத்துக்கு தலைவலியாகவே இருக்கும்.