மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரரான புஜாரா மீண்டும் ஒருமுறை உள்ளூர் போட்டிகளில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து விரைவில் அவர் ஓய்வு முடிவை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தற்போது தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டி, நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டி, மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் போட்டிக்கு புஜாரா போன்ற அனுபவ வீரர்கள் இந்திய அணியில் தேவைப்படுவார்கள் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இளம் வீரர்களை நம்பி ஆஸ்திரேலியா போன்ற தொடர்களுக்கு சென்றால் நிச்சயம் அது பாதகத்தை ஏற்படுத்தும் என்பதால் அனுபவமும் இளமையும் கலந்த ஒரு அணியை உருவாக்க கம்பீர் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே துலிப் கோப்பை தொடரில் புஜாரா, ரகானே போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இராணி கோப்பை தொடர் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற இருக்கிறது. ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணியுடன் இதர இந்திய அணி பங்குபெறும் தொடர் தான் இராணி கோப்பை தொடராகும். இதில் மும்பை அணியின் கேப்டனாக ரஹானேக்கு வாய்ப்பு கிடைத்துவிடும். இதனால் புஜாரா இதர இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்று தகவல் வெளியானது.
ஆனால் மீண்டும் ஒருமுறை தேர்வு குழுவினர் புஜாராவுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் மனம் உடைந்து இருக்கும் புஜாரா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு முடிவை எடுக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகிறது. புஜாரா இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7195 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 206 ரன்கள் ஆகும்.
இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 19 சதம், 35 அரை சதம் என சராசரியாக 43 என்ற அளவில் புஜாரா இருக்கிறார். புஜாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2074 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஐந்து சதம், 11 அரை சதம் அடங்கும். சராசரியாக 49 புள்ளி 38 புஜாரா வைத்திருக்கிறார்.
இதேபோன்று ஆஸ்திரேலிய மண்ணில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா மொத்தமாக 993 அடித்திருக்கிறார். இதில் மூன்று சதம், ஐந்து அரை சதம் அடங்கும். இதனால் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடும் போது புஜாராவின் அனுபவம் நிச்சயம் கை கொடுக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனால் எப்படியும் தம்மை ஆஸ்திரேலிய தொடரில் அழைப்பார்கள் என்று புஜாரா அதற்கு தயாராகி வந்தார்.
ஆஸ்திரேலிய தொடருக்கு செல்ல துலீப் கோப்பையையும் இராணி கோப்பையையும் புஜாரா நுழைவுச்சிட்டாக நம்பி இருந்தார். இந்த நிலையில் துலீப் கோப்பையில் ஏற்கனவே வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தற்போது இராணி கோப்பையிலும் புஜாரா பெயர் சேர்க்கப்படாதது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக கருதப்படுகிறது. இந்திய அணி இளம் வீரர்களை நோக்கி நகர்ந்து விட்டதால் இனி சீனர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத சூழல் ஏற்பட்டு இருக்கிறது.