மும்பை : இராணி கோப்பை கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் இந்திய அணி நட்சத்திர வீரர் ரகானே அபாரமாக விளையாடி வருவது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறது. இந்திய அணியின் உள்நாட்டு கிரிக்கெட் தொடர் பிரதான தொடராக கருதப்படும் இராணி கோப்பை தொடர் இன்று லக்னோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த ரஞ்சி கோப்பையை வென்ற ரஹானே தலைமையிலான மும்பை அணியும், ருதுராஜ் தலைமையிலான இதர இந்திய அணியும் பல பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற கேப்டன் ருதுராஜ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய மும்பை அணியில் பிரித்விஷா நான்கு ரன்களிலும், ஆயுஷ் 19 ரன்களிலும், ஹர்திக் தாமோர் டக் அவுட்டாகியும் வெளியேறினார். இதனால் மும்பை அணி 37 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து கேப்டன் ரகானே மற்றும் ஸ்ரேயாஸ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தது.
கடந்த சில போட்டிகளாக தடுமாறிய ஸ்ரேயாஸ் இன்றைய ஆட்டத்தில் 84 பந்துகளை எதிர் கொண்டு 57 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரி இரண்டு சிக்சர்கள் அடங்கும். ஸ்ரேயாஸ், யாஷ் தயால் ஓவரில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் ரகானே நிதானமாக விளையாடி ரன்களை சேர்ந்து வந்தார். அதன் பின்பு ரகானேவும் சர்பராஸ்கான் ஜோடியும் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இந்த ஜோடியை வீழ்த்த முடியாமல் இதர இந்தியன் அணி வீரர்கள் தடுமாறினர். ஆட்ட நேரம் முடிவில் சர்பராஸ்கான் 88 பந்துகளில் 54 ரன்கள் உடனும், ரகானே 197 பந்துகளை எதிர் கொண்டு 86 ரன்களுடன் களத்தில் உள்ளனர். மும்பை அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்துள்ளது.
இதனை அடுத்து இதர இந்திய அணியின் பந்துவீச்சில் முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளையும், யாஷ் தயால் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்கள்.இந்த நிலையில் வரும் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணிக்கு அனுபவ வீரர்கள் தேவை என வல்லுநர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் ரகானே மிகப்பெரிய சதத்தை விளாசினால் அவருக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.