மும்பை: 2024 இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இரண்டு வீரர்களுக்கு இந்த அணியில் இடம் அளிக்கப்பட்டு இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் முக்கிய உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபிதொடரில் வெற்றி பெறும் அணிக்கும், பிற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற ஒரு டெஸ்ட் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

இந்த ஆண்டு வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இரானி கோப்பை போட்டி நடைபெற உள்ளது. 2023 - 24 ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது. இந்த தொடருக்கான மும்பை அணியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
2024 இரானி கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ள ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி :
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், சரண்ஷ் ஜெயின், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், யாஷ் தயாள், ரிக்கி புய், ஷஸ்வத் ராவத், கலீல் அகமது, ராகுல் சாஹர்
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இது எதிர்பாராத விஷயமாக உள்ளது. அவருக்கு இந்த அணியிலேயே இடம் அளிக்கப்படாது என கூறப்பட்டு வந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கேப்டன் பதவியே அளிக்கப்பட்டு இருக்கிறது. அபிமன்யு ஈஸ்வரன் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். துருவ் ஜுரல் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதால் இருவருமே பிளேயிங் லெவனில் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது.
மானவ் சுதர், சரண் ஜெயின், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார் யாஷ் தயாள் ஆகிய பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர மாற்று வீரர்களாக ரிக்கி புய், ஷஸ்வத் ராவத், கலீல் அகமது மற்றும் ராகுல் சாஹர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அணியின் சமநிலையை கருத்தில் கொண்டு இந்த மாற்று வீரர்களில் சிலருக்கு போட்டியின் போது வாய்ப்பு அளிக்கப்படலாம்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றுள்ள இரண்டு வீரர்கள் உள்ளனர். விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் யாஷ் தயாள் ஆகிய இருவரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இடம் பெற்று இருக்கின்றனர். அந்த போட்டி செப்டம்பர் 27 அன்று துவங்க உள்ளது. அந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர்கள் இருவரும் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை என்றால் அவர்கள் இரானி கோப்பை போட்டியில் விளையாடுவார்கள் என பிசிசிஐ அறிவித்து உள்ளது.
2024 இரானி கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ள மும்பை அணி :
அஜின்க்யா ரஹானே (கேப்டன்), பிரித்வி ஷா, ஆயுஷ் மத்ரே, முஷீர் கான், சர்ஃபராஸ் கான், ஸ்ரேயாஸ் ஐயர், சித்தேஷ் லாட், சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஹர்திக் தாமோர் (விக்கெட் கீப்பர்), சித்தந்த் அத்தாத்ராவ் (விக்கெட் கீப்பர்), ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியான், ஹிமான்ஷு சிங் , ஷர்துல் தாக்கூர், மோஹித் அவஸ்தி, முகமது ஜூனேட் கான், ராய்ஸ்டன் டயஸ்.
மும்பை அணியில் இடம் பெற்றுள்ள சர்ஃபராஸ் கானும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கிறார். அவர் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பங்கேற்காத பட்சத்தில் இரானி கோப்பையில் விளையாடுவார்.