லக்னோ: 2025 இரானி கோப்பை டெஸ்ட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டத்தில் இரண்டு அணிகளும் ரன் குவிப்பில் ஈடுபட்டன. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை அணியின் விக்கெட்களை விரைவாக வீழ்த்தி இருக்கிறது ரெஸ்ட் ஆஃப் இந்தியா. அதனால் இந்த போட்டி நான்காம் நாள் முடிவில் பரபரப்பான நிலையை எட்டி இருக்கிறது. சரண்ஷ் ஜெயின் அபாரமாக பந்து வீசி மும்பை அணியின் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் 2024 ரஞ்சி கோப்பையை வென்ற மும்பை அணியும், மற்ற அணிகளை சேர்ந்த சிறந்த வீரர்களை உள்ளடக்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் மோதி வருகின்றன. இதில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த மும்பை அணி 537 ரன்கள் சேர்த்தது. சர்ஃபராஸ் கான் ஆட்டமிழக்காமல் 222 ரன்கள் சேர்த்து இருந்தார். அடுத்து பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 416 ரன்கள் சேர்த்து இருந்தது.

அந்த அணியின் அபிமன்யு ஈஸ்வரன் 191 ரன்களும், துருவ் ஜுரல் 93 ரன்களும் சேர்த்து இருந்தனர். முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 121 ரன்கள் முன்னிலை பெற்றது. நான்காம் நாள் அன்று மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது. ப்ரித்வி ஷா ஒரு புறம் ரன் குவிப்பில் ஈடுபட மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
பிரித்வி ஷா 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நான்காம் நாள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து இருந்தது. இன்னும் நான்கு விக்கெட்கள் மட்டுமே கையில் உள்ள நிலையில் மும்பை 274 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சர்ஃபராஸ் கான் மற்றும் தனுஷ் கோட்டியான் களத்தில் உள்ளனர். சரண்ஷ் ஜெயின் 4 விக்கெட்களை வீழ்த்தி மும்பை அணியின் விக்கெட் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
ஐந்தாம் நாள் அன்று சர்ஃபராஸ் கான் மற்றும் தனுஷ் கோட்டியானை விரைவாக ஆட்டம் இழக்கச் செய்தால் மும்பை அணி 200 ரன்கள் எடுப்பதற்குள் ஆல் அவுட் ஆக வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு 320 ரன்களுக்கும் மேல் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஐந்தாம் நாள் அன்று அத்தனை பெரிய இலக்கை எட்டுவது ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு சவாலாகவே இருக்கும். ரெஸ்ட் ஆஃப் இந்தியா இந்த போட்டியை டிரா செய்ய முயற்சி செய்யும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.