மும்பை: ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம் கிடைக்காது என கூறப்படுகிறது. இந்திய அணியில் அவர்களுக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கப்படாத நிலையில் உள்ளூர் டெஸ்ட் போட்டியான இரானி கோப்பையிலும் வாய்ப்பு அளிக்கப்படாது என தெரிகிறது.
இந்திய அளவிலான உள்ளூர் டெஸ்ட் தொடர்களிலேயே முக்கியமானதாக பார்க்கப்படும் இரானி கோப்பை போட்டி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. இந்திய அளவிலான உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி டிராபி கோப்பை வென்ற அணிக்கும், பிற அணிகளை சேர்ந்த சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையே நடப்பது தான் இரானி கோப்பை போட்டி.

2023 - 24 ரஞ்சி கோப்பை தொடரை மும்பை அணி வென்று இருந்தது. எனவே, இந்த ஆண்டு மும்பை அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான மும்பை அணிக்கு அஜின்க்யா ரஹானே கேப்டனாக இருப்பார் எனவும், அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், முஷீர் கான், ப்ரித்வி ஷா போன்ற முக்கிய வீரர்கள் இடம் பெறுவார்கள் எனவும் தகவல் வெளியாகி இருந்தது.
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இந்தியாவின் சிறந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்ற நிலையில் அதில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் அளிக்கப்படாது என கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் கூட இடம் கிடைக்காது என கூறப்படுகிறது. இது அவருக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்திய அணி அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. இந்த சமயத்தில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு அந்த டெஸ்ட் தொடர்களின் போது இந்திய அணிக்கு தேர்வாக்கும் வாய்ப்பு கிடைக்கக் கூடும்.
அந்த வாய்ப்பு கூட ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைக்காத வகையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் அவர் தேர்வு செய்யப்படப் போவதில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. சஞ்சு சாம்சனும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார் எனவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த துலீப் ட்ராபி டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் 6 இன்னிங்ஸில் 232 ரன்கள் சேர்த்து இருந்தார். அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் நான்காவது இடத்தை பெற்றிருந்தார். சஞ்சு சாம்சன் 4 இன்னிங்ஸில் 196 ரன்கள் குவித்து இருந்தார். அப்படி இருந்தும் அவருக்கும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம் கிடைக்காது என கூறப்படுகிறது.