மும்பை : இராணி கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வீரர் சர்பராஸ்கான் அபாரமாக விளையாடி 221 ரன்கள் குவித்திருக்கிறார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் நீக்கப்பட்டதற்கு சர்பராஸ்கான் தன்னுடைய பேட் மூலம் பதிலளித்திருக்கிறார்.
சர்பராஸ்கான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகமானார். மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சர்பராஸ்கான் மூன்று அரை சதம் அடித்திருக்கிறார். இந்த சூழலில் சர்பராஸ்கான் இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம்பெறுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கே எல் ராகுல் அவருடைய இடத்தில் பிடித்துக் கொண்டார்.

இதற்கு கேஎல் ராகுல் சீனியர் என்பதால் அவருக்கு இந்த இடம் வழங்கப்பட்டதாக இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இராணி கோப்பை கிரிக்கெட் தொடரில் களமிறங்கிய சர்பராஸ்கான் அபாரமாக விளையாடி 276 பந்துகளில் 221 ரன்கள் குவித்தார். இதில் 25 பவுண்டரிகளும் நான்கு இமாலய சிக்சர்களும் அடங்கும்.
சர்பராஸ்கானின் ஸ்ட்ரைக் ரேட் 80 என்ற அளவில் இருக்கிறது. இதன் மூலம் சர்பராஸ் கான் ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறார். இராணி கோப்பையில் மும்பை அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்/ இதேபோன்று இராணி கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சர்பராஸ்கான் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை முந்தி இருக்கிறார்.
இந்தத் தொடரில் வசீம் ஜாஃபர் அதிகபட்சமாக ஒரே இன்னிங்சில் 286 ரன்கள் அடித்ததே சாதனையாகும். அதன் பிறகு முரளி விஜய் 266 ரன்கள்,பிரவீன் ஆம்ரே 246 ரன்களும், சுரேந்தர் அமர்நாத் 235 ரன்களும், ரவி சாஸ்திரி 217 ரன்களும், ஜெய்ஸ்வால் 213 ரன்களும் அடித்திருந்த நிலையில் தற்போது சர்பராஸ்கான் ஜெய்ஸ்வால் ரவி சாஸ்திரி ஆகியோரை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் மும்பை அணி இன்னும் டிக்ளேர் செய்யவில்லை. இதனால் நாளையும் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தால் 300 ரன்கள் தொட முயற்சி செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.