லக்னோ: இராணி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக ஆடி வரும் ஷர்துல் தாக்கூர் 102 டிகிரி காய்ச்சலுடன் பேட்டிங் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 9வது விக்கெட்டுக்கு சர்ஃபராஸ் கானுடன் இணைந்து 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர், 36 ரன்களில் ஆட்டமிழந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
கடந்த ரஞ்சி டிராபி சீசனின் போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரின் கால்களில் காயம் ஏற்பட்டது. இதன்பின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஷர்துல் தாக்கூர், அடுத்த சில தொடர்களில் இருந்து விலகினார். ஓய்வில் இருந்த அவருக்கு, ஐபிஎல் தொடருக்கு பின் உடனடியாக லண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த காயத்தில் இருந்து குணமடைய சில மாதங்களாகிய நிலையில், இராணி கோப்பையில் ஷர்துல் தாக்கூர் நேரடியாக களமிறங்கியுள்ளார். அக்.1ஆம் தேதி ஆட்டம் தொடங்கிய போதே மும்பை அணியின் ஷர்துல் தாக்கூர் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். இதனால் முதல் நாளில் மருத்துவ உதவியை பெற்ற ஷர்துல் தாக்கூர், 2வது நாளில் படுத்த படுக்கையாகிவிட்டார் என்று தெரிய வந்துள்ளது.
இதனால் ஷர்துல் தாக்கூரின் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டு கொண்டே இருந்தது. இறுதியாக 8வது விக்கெட் வீழ்ந்த பின், 102 டிகிரி காய்ச்சலுடன் ஷர்துல் தாக்கூர் பேட்டிங் செய்வதற்காக களம் புகுந்தார். சர்ஃபராஸ் கான் சிறப்பாக ஆடிய நிலையில், ஷர்துல் தாக்கூரும் ஒரு சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 36 ரன்களை விளாசி அசத்தினார். இதனால் மும்பை அணியின் ஸ்கோர் 500 ரன்களை கடந்தது.
9வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பின், ஷர்துல் தாக்கூர் 36 ரன்களில் போல்டாகி வெளியேறினார். அவர் பெவிலியன் திரும்பிய போது நட்சத்திர வீரர்களான ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் எழுந்து நின்று பாராட்டி வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து ஷர்துல் தாக்கூர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், மருந்துகள் எடுத்து கொண்ட பின் அவரது உடலுக்கு ஓய்வு தேவைப்பட்டது. இதனால் மும்பை பேட்டிங்கின் போது கூட ஷர்துல் தாக்கூர் ஓய்வறையில் தூங்கி கொண்டிருந்தார். ஆனால் உடலில் எவ்வளவு வலிகள் இருந்தாலும், பேட்டிங் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். அவரின் இரத்த மாதிரியை சோதனை செய்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து ஷர்துல் தாக்கூரின் சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதோடு, நேற்றிரவு மருத்துவமனையிலேயே ஷர்துல் தாக்கூர் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்காக ஷர்துல் தாக்கூர் களமிறங்குவாரா என்பதே சந்தேகம் தான். நீண்ட இடைவெளிக்கு பின் கம்பேக் கொடுத்துள்ள ஷர்துல் தாக்கூரின் மன உறுதி ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.