மும்பை : இந்திய அணி அடுத்த நான்கு மாதத்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் தொடர்ந்து இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரை வென்றது.
இதனால் ஹாட்ரிக் சாதனை படைக்கும் உத்வேகத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா அணி வரும் நவம்பர் மாதம் செல்ல உள்ளது. இந்த போட்டிகளுக்கு அணியை தயாரிக்கும் விதமாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ நடத்தி வருகிறது.

அண்மையில் துலீப் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி பல வீரர்கள் தேர்வு குழுவினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் ஆர்ஸ்தீப் துலீப் கோப்பை தொடரில் அபாரமாக செயல்பட்டு 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவில் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக ஆர்ஸ்தீப் சிங் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கய உள்ள இராணி கோப்பை தொடரில் ஆர்ஸ்தீப் சிங் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், ஆல்ரவுண்டர் ரியான் பராக் உள்ளிட்டவர்களும் இராணி கோப்பை தொடரில் சேர்க்கப்படவில்லை.இதை போன்று துலீப் கோப்பை தொடரில் விளையாடிய சிவம் துபேவுக்கும் இராணி கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
உயிரைக் கொடுத்து விளையாடிய ஆர்ஸ்தீப் சிங் போன்றவர்களுக்கு இராணி கோப்பையில் வாய்ப்பு மறுக்கப்பட்டதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்விக்குறியாகி இருந்தது.
ஆனால் இந்த முன்னணி வீரர்கள் இராணி கோப்பை தொடரில் தேர்வு செய்யப்படாததற்கு ஒரு காரணம் இருக்கிறது. இராணி கோப்பை தொடர் நடைபெற்ற அடுத்த நாளே, வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் சஞ்சு சாம்சன், சிவம் துபே ரியான் பராக் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட போகிறது. இதன் காரணமாக தான் இராணி கோப்பை டெஸ்ட் தொடரில் இந்த நான்கு வீரர்களும் சேர்க்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று சிஎஸ்கே வீரர் ருதுராஜ், இராணி கோப்பை தொடரில் இதர இந்திய அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.