இந்திய அணிக்கு எதிராக வரலாற்று சாதனை..அயர்லாந்து பயிற்சியாளர் எடுத்த திடீர் முடிவு.. ரசிகர்கள் சோகம்
பெல்ஃபாஸ்ட்: இந்திய அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டி20 தொடர் வெற்றிக்குப் பிறகு தனது பதவியிலிருந்து அயர்லாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஹென்றிச் மாலன், விலகியுள்ளார். உலக சாம்பியனான இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அயர்லாந்து வரலாற்று சாதனை படைத்தது.
மாலனின் சிறந்த சேவைக்கு அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்து, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளது. "நன்றி ஹென்றிச். விடைபெறுவதற்கு இதைவிட ஒரு சிறந்த வழி இருக்க முடியாது! உங்களது அடுத்த பயணத்திற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று கிரிக்கெட் வாரியம் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

ஹென்றிச் மாலனின் சாதனைகள் நிறைந்த பயணம்
அயர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2022-ஆம் ஆண்டு மாலன் பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலத்தில், 2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கு அயர்லாந்து தகுதி பெற்றது மட்டுமின்றி, அதே தொடரில் இங்கிலாந்து அணியையும் வீழ்த்தி அசத்தியது. மேலும், 2024-இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. அதுமட்டுமின்றி, பெல்ஃபாஸ்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வென்று, சொந்த மண்ணில் தனது முதல் டெஸ்ட் வெற்றியையும் மாலனின் பயிற்சியின் கீழ் அயர்லாந்து அணி பதிவு செய்தது.
தமது விடைபெறல் குறித்து பேசிய மாலன் "இந்த வீரர்கள், பணியாளர்கள் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் சமூகத்துடன் இணைந்து பணியாற்றியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும். நானும் எனது குடும்பத்தினரும் இங்கு சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளோம். அயர்லாந்து கிரிக்கெட்டுடனான எங்களது காலத்தை எப்போதும் மிகுந்த அன்போடு நினைவுகூர்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 2-0 என்ற வரலாற்றுத் தொடர் வெற்றியுடன் மாலன் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மிகச் சிறந்த முறையில் விடைபெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு வடிவத்திலும் அயர்லாந்து அணி இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். மேலும், இந்தியாவிற்கு எதிராக அயர்லாந்து பெறும் முதல் தொடர் வெற்றியும் இதுவே ஆகும்.
புதிய தலைமை பயிற்சியாளராக கேரி வில்சன் நியமனம்
தலைமை பயிற்சியாளர் பொறுப்பு மாற்றத்தை சுமுகமாக மேற்கொள்ளும் வகையில், வரவிருக்கும் ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடருக்கு முன்னதாக புதிய பயிற்சியாளருடன் இணைந்து மாலன் பணியாற்ற உள்ளார். இதற்கிடையில், அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது புதிய தலைமை பயிற்சியாளரை அறிவித்துள்ளது. முன்னாள் அயர்லாந்து கிரிக்கெட் வீரர் கேரி வில்சன் புதிய தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்க உள்ளார்.
40 வயதாகும் கேரி வில்சன், அயர்லாந்து அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 292 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர், 2022-இல் அயர்லாந்து அணியின் உதவி பயிற்சியாளராகப் பணியாற்றினார். இதன் மூலம், 1990-களின் தொடக்கத்தில் பணியாற்றிய ஜான் வில்ஸுக்குப் பிறகு, கடந்த 30 ஆண்டுகளில் அயர்லாந்தில் பிறந்த முதல் தலைமை பயிற்சியாளர் என்ற பெருமையை கேரி வில்சன் பெற்றுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அயர்லாந்து அணியின் பொறுப்பை வில்சன் முழுமையாக ஏற்க உள்ளார். இந்த பயிற்சியாளர் மாற்றம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

