IND vs IRE: அயர்லாந்திடம் தோற்றதுக்கு காரணம் என்ன? உண்மையை ஒப்புக்கொண்ட அபிஷேக் சர்மா
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், நடப்பு டி20 உலகக் கோப்பை சாம்பியனான இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆடுகளத் தன்மைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றி கொள்ள தவறியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்று தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
அதிரடியான அரைசதம் அடித்த போதிலும், எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் வடிவத்திலும் அயர்லாந்துக்கு எதிராக இந்தியா தனது முதல் தோல்வியைத் தழுவுவதைத் அபிஷேக் சர்மாவால் தடுக்க முடியவில்லை. ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சிக்கு இந்தத் தோல்வி ஏமாற்றமளிக்கும் ஒரு தொடக்கமாக அமைந்துள்ளதுடன், இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் அயர்லாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெறவும் வழிவகுத்துள்ளது.

'சூழலுக்கு விரைவாகப் பழகிக்கொள்ள வேண்டும்'
போட்டிகளுக்கு இடையே மிகக் குறைந்த இடைவெளிகளே இருக்கும்போது, ஆடுகளத் தன்மைகளுக்கு ஏற்ப விரைவாக தங்களை மாற்றி கொள்வது அவசியம் என்று அபிஷேக் சர்மா தெரிவித்தார். "ஒரு அணியாக நாம் ஆடுகளத்தின் சூழலுக்கு எவ்வளவு விரைவாகப் பழகுகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம். ஏனெனில், அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடும்போது, ஒரு குழுவாக நாம் முன்னோக்கிச் சென்று ஆடுகளத் தன்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பயிற்சி அமர்வுகள் மூலமாகவோ அல்லது ஆடுகளத்தை நேரடியாகப் புரிந்துகொள்வதன் மூலமாகவோ அதனைச் செய்ய வேண்டும். ஒரு ஆதிக்கம் செலுத்தும் அணியாக, நாம் அதற்கேற்ப மிக விரைவாக மாற வேண்டும் என்று நான் கருதுகிறேன். இன்று நாங்கள் அதைத்தான் செய்ய முயன்றோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை" என்று போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அபிஷேக் சர்மா கூறினார்.
வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து
இப்போட்டியில் முதலில் ஆடிய அயர்லாந்து அணி, கேப்டன் லோர்கன் டக்கரின் சிறப்பான அரைசதத்தின் உதவியுடன் 182/9 என்ற வலுவான இலக்கை நிர்ணயித்தது. காரெத் டெலானி 49 ரன்களும், ஜார்ஜ் டாக்ரெல் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்காரை உயர்த்தவும் உதவினர். இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அபிஷேக் அதிரடி; சரிந்த இந்திய பேட்டிங் வரிசை
183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, அபிஷேக் சர்மா முதல் ஓவரில் இருந்தே அதிரடி ஆட்டத்தைத் தந்து சிறப்பான தொடக்கத்தை அளித்தார். வெறும் 19 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இருப்பினும், அவருக்கு மறுமுனையில் இருந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சோபிக்கத் தவறினர். அதே நேரத்தில் திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோரால் வலுவான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை.
ஷிவம் துபே 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றி நம்பிக்கையை சற்று மீட்டெடுத்தார், ஆனால் அவரது ஆட்டமிழப்போடு அந்த நம்பிக்கையும் முற்றுப்பெற்றது. இந்திய அணி இறுதியில் 18.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அயர்லாந்து தரப்பில் மேத்யூ ஹோலார்ட் மற்றும் மேத்யூ ஹம்ப்ரிஸ் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அறிமுக வீராரான ஜெய் முந்த்ரா 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
தொடரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அயர்லாந்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இந்திய அணி தொடர் தோல்வியைத் தவிர்க்க இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.


Click it and Unblock the Notifications

