ரிஷப் பண்ட் இந்த வீரரை பார்த்து பாடம் கற்கனும்.. மனதை விட்டு விடாதீர்கள்.. இர்பான் பதான் கருத்து
மும்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படவில்லை. தேர்வுக்குழுவினர் கே.எல்.ராகுல் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்துள்ள நிலையில், ரிஷப் பண்ட் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்றும், தேர்வுக்குழுவினர் அவரைப் புறக்கணிக்கக் கூடாது என்றும் முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்பான் பதான் வலியுறுத்தியுள்ளார்.
2027 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி தங்களது ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கிவிட்டது. தர்மசாலாவில் சனிக்கிழமை தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடருடன் ஆரம்பமாகின்றன. இரு அணிகளும் இதற்கு முன்பு பல்வேறு தொடர்களில் மோதியிருந்தாலும், இருதரப்பு ஒருநாள் தொடரில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

சுப்மன் கில் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி, விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா (ஆகிய முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இல்லாத நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தயாராகி வருகிறது. இவர்களின் காயம் மற்ற இளம் வீரர்களுக்கு தங்களை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
விக்கெட் கீப்பர் தேர்வு குறித்து பதான் கருத்து
இந்தத் தொடரில் இஷான் கிஷன் மீது கூடுதல் கவனம் இருக்கும். 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடாத அவர், கே.எல்.ராகுலுக்கு அடுத்தபடியாக மாற்று விக்கெட் கீப்பராக தனது இடத்தை உறுதிப்படுத்த முயற்சிப்பார். தற்போதைக்கு தேர்வுக்குழுவினர் கிஷன் மீது நம்பிக்கை வைத்துள்ள நிலையில், சஞ்சு சாம்சனையும் பரிசீலிக்க வேண்டும் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
"ஒருநாள் போட்டிகளில் கே.எல்.ராகுல் தான் இந்தியாவின் முதல் தேர்வு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன். அவர் 5 மற்றும் 6 ஆகிய வரிசைகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் விளையாடக்கூடிய அவரது இந்த திறன் அணிக்குப் பலம் சேர்க்கிறது" என்று பதான் தெரிவித்துள்ளார். மாற்று விக்கெட் கீப்பராக இஷான் கிஷனைத் தேர்வு செய்தது புத்திசாலித்தனமான முடிவு என்றும், மூன்றாவது இடத்தில் சஞ்சு சாம்சன் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"ரிஷப் பண்ட் நம்பிக்கையை இழக்கக் கூடாது"
ஒரு காலத்தில் இந்தியாவின் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தவிர்க்க முடியாத வீரராகக் கருதப்பட்ட ரிஷப் பண்ட், சமீபகாலமாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் ஒருநாள் போட்டியில் விளையாடி ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.
ஆனாலும், பண்ட்டை இப்போதே ஓரங்கட்டிவிடக் கூடாது என்று பதான் தேர்வுக்குழுவினரைக் கேட்டுக்கொண்டுள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்த இஷான் கிஷனை உதாரணமாக எடுத்துக்கொண்டு பண்ட் செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
"ரிஷப் பண்ட்டை முற்றிலும் புறக்கணித்துவிடாதீர்கள் என்று நான் தேர்வுக்குழுவினருக்கு அறிவுறுத்துகிறேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவரது சமீபத்திய செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என்பது உண்மைதான். ஆனால் இஷான் கிஷனைப் பாருங்கள். அவர் அணியில் இல்லாதபோது அதை ஒரு உந்துதலாக எடுத்துக்கொண்டு, உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, ஜார்கண்ட் அணியை சையத் முஷ்டாக் அலி கோப்பை வெற்றிக்கு வழிநடத்தினார்" என்று பதான் கூறினார்.
ரிஷப் பண்ட், இஷானிடமிருந்து உத்வேகம் பெற்று தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்றும், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மீண்டும் திரும்புவதற்கான நம்பிக்கையை அவர் இழக்கக் கூடாது என்றும் பதான் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது அணியில் இடம் பெறாவிட்டாலும், பண்ட் தொடர்ந்து தேர்வுக்குழுவினரின் கண்காணிப்பில் தான் உள்ளார். கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், காயம் மற்றும் ஆட்ட வாய்ப்பு கிடைக்காத காரணங்களால் விளையாட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

