இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
மும்பை: நியூசிலாந்து அணியை வீழ்த்தி உலகின் நம்பர் 1 அணியாக தகுதிப்பெற்றுவிட்டோம் என மகிழ்ச்சியடைய வேண்டாம் என இந்திய அணி வீரர்களுக்கு முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3 - 0 என்ற புள்ளிக்கணக்கில் ஒயிட் வாஷ் செய்து இந்திய அணி அசத்தியது. இதன் மூலம் 50 ஓவர் கிரிக்கெட்டிற்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தையும் பிடித்தது.
2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் தான் தற்போது இந்த தொடர்கள் நடந்து வருகின்றன. எனவே தொடக்கத்திலேயே இந்திய அணி நல்ல முடிவுகளை பெற்றுள்ளது.

நம்பர் 1 அணி
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா என பெரும்பாலோனோர் சிறப்பான ஃபார்மில் இருப்பதால் தொடர்ச்சியாக 300+ ரன்கள் வருகிறது. பந்துவீச்சில் பும்ராவின் இடத்தை சிராஜ் நிரப்பி வருகிறார். இவருக்கு உறுதுணையாக உம்ரான் மாலிக், முகமது ஷமி ஆகியோர் திகழ்கின்றனர்.

இர்ஃபான் அட்வைஸ்
இந்நிலையில் இந்தியா இன்னும் பலவீனமாக தான் இருப்பதாக இர்ஃபான் பதான் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணி பவுலிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன். எந்தெந்த மைதானங்களில் எந்தெந்த வகையான பவுலர்களை பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை சரியாக செய்ய வேண்டும். இதே போல அந்த பவுலர்கள் பிட்ச்-ஐ எப்படி கையாள்கிறார்கள் என்பது முக்கியம்.

தடுமாற்றத்தை பார்க்கிறேன்
இந்தியாவின் பெரும்பாலான பிட்ச்கள் மிகவும் பிளாட்டாக இருக்கும் சூழலில் அதற்கேற்றார் போல் பவுலிங் செய்ய முடியாமல் பவுலர்கள் தடுமாறுகிறார்கள். டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இன்னும் தெளிவாக தெரிந்திருக்கும். எனவே அனைத்து வகையான பிட்ச்-களிலும் சோபிக்க கூடிய 2 பவுலர்களை அணியில் வைத்திருக்க வேண்டும். களத்திற்கு ஏற்ற வகையில் மீத பவுலர்களை வைத்துக்கொள்ளலாம் என இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.

கடைசி ஆட்டம்
இந்திய அணிக்கு இன்னும் ஜூன் மாதம் வரையில் எந்தவித ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் இல்லை. தற்போது நியூசிலாந்துடனான டி20 தொடரை முடித்த பிறகு ஆஸ்திரேலியாவுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதன் பின்னர் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் மே இறுதி வரை நடைபெறும் என்பதால் ஜுன் மாத இறுதியில் தான் ஒருநாள் கிரிக்கெட் தொடரை பார்ப்போம் எனத்தெரிகிறது.


Click it and Unblock the Notifications