பாஸ்கரன்
பாஸ்கரன் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே நடைபாதையில் செருப்பு தைக்கும் பணியை 1993 முதல் செய்து வருகிறார். 12 ஆண்டுகளாக ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்காக செருப்பு தைக்கும் பணியில் இருக்கிறார்.
ஐபிஎல் வருமானம்
ஐபிஎல் நடக்கும் காலத்தில் சிஎஸ்கே அணி வீரர்களின் ஷூ மற்றும் பிற உபகரணங்களை பழுது நீக்கி கொடுக்கும் பணியை செய்து வந்தார். சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் சம்பாதித்து வந்துள்ளார். ஐபிஎல் நாட்களில் ஒரு போட்டிக்கு 1000 ரூபாய் அவருக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ளது.
சிஎஸ்கே வீரர்கள் அளிக்கும் பணம்
வீரர்கள் தனிப்பட்ட முறையிலும் அவருக்கு பணம் அளிப்பார்கள். அந்த வகையில் கடந்த ஐபிஎல் சீசனில் தொடர் முடிவில் சிஎஸ்கே அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் இணைந்து 25,000 ரூபாயை தனக்கு அளித்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார் பாஸ்கரன். இது தவிர தோனி தனிப்பட்ட முறையில் அவருக்கு பணம் அளிப்பாராம்.
வருமானம் இல்லை
ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இல்லாத நிலையில், சிஎஸ்கே அணி மூலம் கிடைக்கும் வருமானமும் இன்றி, லாக்டவுன் மற்றும் தொழில்கள் முடங்கி இருக்கும் நிலையில் தினம் கிடைக்கும் வருமானமும் இன்றி தவித்து வருகிறார் பாஸ்கரன். அவரது மகன்களுக்கும் வேலை இல்லாமல் அனைவரும் தவித்து வருகின்றனர்.
முன்வந்த பதான்
இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அந்த தகவலை அறிந்த முன்னாள் வீரர் இர்பான் பதான் அவரது தொடர்பு எண்ணை கேட்டு வாங்கி உள்ளார். பலமுறை அழைத்தும் பாஸ்கரனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
உதவி
எனினும், விடாமல் முயற்சி ஒரீரு நாட்களில் அவரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். உடனடியாக அவருக்கு ஒரு ஐபிஎல் சீசனில் கிடைக்கும் தொகையான 25,000 ரூபாயை வழங்கி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியில் சொல்லவும் இல்லை.
பாராட்டு
பின்னர், பாஸ்கரன் வேறு ஒரு பேட்டியில் தனக்கு இர்பான் பதான் செய்த உதவி பற்றி கூறி இருக்கிறார். இதையடுத்து பலரும் இர்பான் பதானை பாராட்டி வருகின்றனர். அவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பல உதவிகள் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
ஒரு சீசன் பழக்கம்
இத்தனைக்கும் இர்பான் பதான் சிஎஸ்கே அணியில் 2015 சீசனில் மட்டுமே ஆடி உள்ளார். வெறும் ஒரு சீசனில் சில நாட்கள் மட்டுமே பார்த்து பேசிய ஒரு தொழிலாளிக்கு பெரிய உதவியை செய்துள்ளார் இர்பான் பதான். ஒரு வீரராக பதான் மீது பல விமர்சனம் உள்ளது.
பதான் முகம் இதுதான்
அவருக்கு இந்திய அணி வாய்ப்பு மறுக்கப்பட்டது இன்றளவும் ஒரு விவாதப் பொருள் தான். அவர் சரியாக செயல்படவில்லை என அவர் முகத்துக்கு நேராக குற்றம் சாட்டுபவர்கள் உண்டு. ஆனாலும், கிரிக்கெட்டை தாண்டி அவர் உண்மையில் யார் என்பதற்கு இந்த ஒரு விஷயம் உதாரணமாக அமைந்துள்ளது.
இது கடன் தான்
பாஸ்கரன் தான் பெற்ற உதவி பற்றி கூறுகையில், தான் இந்த பணத்தை கடனாக மட்டுமே பெற்றுக் கொண்டதாகவும், இதை தான் திரும்பக் கொடுக்க உள்ளதாகவும் கூறி உள்ளார். விரைவில் கிரிக்கெட் நடக்காவிட்டால் தான் போக வேண்டியது தான் என்றார்.