இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கு, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், வீட்டுக்கு அழைத்து, விருந்து வைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அனில் கும்ப்ளே தனது தலைமை பயிற்சியாளர் பதவியைச் சமீபத்தில் ராஜினாமா செய்த சம்பவம் கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மேலும், கும்ப்ளேவை, இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பெரும்பாலானோருக்கு, தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என்றும், ஒரு கருத்து எழுந்தது. இது தொடர்பான விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் அனல் பறந்தது.
இந்நிலையில், இவ்வித விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், அனில் கும்ப்ளேவை, தனது வீட்டுக்கு அழைத்து, பிரியாணி விருந்து கொடுத்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுபற்றி, இருவருமே, டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு, புகைப்படங்களையும் பகிர்ந்து, தங்களுக்குள், மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
உங்களுக்கு பிரியாணி விருந்து அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இர்ஃபான் பதானும், இந்த விருந்தில் பங்கேற்றதற்கும், பிரியாணிக்கும் நன்றிகள் என்று கும்ப்ளேவும், டுவிட்டரில் பதிவு வெளியிட்டுப் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.
இது விராட் கோலி உள்ளிட்ட மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு, ஒரு மூத்த நபரை எப்படி மதிக்க வேண்டும் என்ற பாடத்தை மறைமுகமாக உணர்த்துவதாக உள்ளதென்று, கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.