தோனிக்கு ஒரு நியாயம்.. அவங்க 2 பேருக்கு ஒரு நியாயமா.. இதுக்கு பதில் சொல்லியே ஆகணும் - இர்பான் பதான்!
டெல்லி : இந்திய அணியில் தோனி இனி விளையாடவே முடியாது என கூறப்படும் நிலையில், அவரை அணியில் தேர்வு செய்தால் பிசிசிஐ பதில் சொல்லியே ஆக வேண்டும் என அதிரடியாக கூறி உள்ளார் முன்னாள் வீரர் இர்பான் பதான்.
Recommended Video
இந்திய அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் ராகுல், ரிஷப் பண்ட் ஒரு வருடத்திற்கு மேலாக ஆடி வருகிறார்கள்.
இந்த நிலையில், தோனியை அணியில் இப்போது தேர்வு செய்தால், அது குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்தே ஆக வேண்டும் என கூறி உள்ளார் இர்பான் பதான்.

தோனி ஓய்வு இல்லை
தோனி கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்திய அணியில் இடம்பெறவில்லை. 2019 உலகக்கோப்பை தொடருடன் அவர் ஓய்வு பெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் அப்படி எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை.

2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால் மீண்டும் அணிக்குள் வருவார் என பரவலாக பேசப்பட்டது. அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தேர்வுக் குழு தலைவர் சுனில் ஜோஷி அதை உறுதி செய்தனர். தோனியும் ஐபிஎல் தொடருக்காக தயாராகி வந்தார்.

கொரோனா வைரஸ் சிக்கல்
ஆனால், இதன் இடையே கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. அந்த தொடர் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதை தடுத்து நிறுத்தி உள்ளது.

நேரடி வாய்ப்பு?
எனினும், சிலர் தோனி நேரடியாக இந்திய அணியில் வாய்ப்பு பெறுவார். அதில் தன்னை நிரூபித்து 2020 டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார் என கூறி வருகிறார்கள். இந்த நிலையில் அது பற்றி முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசி உள்ளார்.

நிச்சயம் ஆட வேண்டும்
பதான் கூறுகையில், "தோனி நிச்சயம் ஆட வேண்டும். அவர் மீண்டும் ஆடினால், நிச்சயம் இந்திய அணிக்கு ஆட வேண்டும். அவர் நம்மிடம் இருக்கும் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். இந்த நாட்டுக்காக மிக சிறப்பாக ஆடி உள்ளார்" என்றார்.

நியாயமாக இருக்குமா?
மேலும், "அவர் கிரிக்கெட் உலகத்துக்கு நிறைய கொடுத்து இருக்கிறார். ஆனால், அவர் திடீரென இப்போது அணிக்கு தேர்வு செய்யப்பட்டால், அது இப்போது அணியில் தொடர்ந்து ஆடி வருபவர்களுக்கு செய்யும் நியாயமாக இருக்குமா? என்ற முக்கிய கேள்வி எழுகிறது" என்றார் பதான்.

ராகுல், பண்ட்
"ராகுல், ரிஷப் பண்ட் கடந்த ஒரு வருடமாக சிறப்பாக ஆடி வருகிறார்கள். எனவே, இந்த கேள்விக்கு பிசிசிஐ பதில் அளித்தே ஆக வேண்டும்" என கூறினார் இர்பான் பதான். ஆனால், பிசிசிஐ தோனியை தேர்வு செய்யும் எண்ணத்தில் இல்லை என்றே தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications