மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். தன்னை பேட்டிங்கில் நம்பர் 3-ல் களமிறக்கியதால், ஒரு சீனியர் வீரர் கோபமடைந்து தனது சட்டையைப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவர் கூறியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மூத்த வீரர் யார் என்பதை அவர் கூறவில்லை. அதே சமயம் சச்சின் உள்ளிட்ட சில ஜாம்பவான் வீரர்கள் பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் இல்லை என்று மட்டும் கூறி உள்ளார்.

2005-06 காலகட்டத்தில், பயிற்சியாளர் கிரெக் சேப்பல் மற்றும் கேப்டன் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் ஒன்றுதான், பந்துவீச்சாளரான இர்பான் பதானை பேட்டிங்கில் நம்பர் 3 இடத்திற்கு உயர்த்தியது. இது ஒருபுறம் சில வெற்றிகளைத் தந்தாலும், பதானின் பந்துவீச்சு திறனைப் பாதித்ததாக இன்றுவரை விமர்சிக்கப்படுகிறது.
இந்த முடிவின் பின்னணியில், அப்போதைய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் யோசனை இருந்ததாக இர்பான் பதான் பின்னர் தெளிவுபடுத்தியிருந்தார். சுழற்பந்து வீச்சாளர்களைத் தாக்கி ஆடுவதற்கும், புதிய பந்தை எதிர்கொள்ளும் திறமை இருந்ததாலும் சச்சின் இந்த ஆலோசனையை வழங்கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இர்பான் பதான், இந்த பேட்டிங் ஆர்டர் மாற்றம் அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் ஏற்படுத்திய சலசலப்பு குறித்து முதன்முறையாகப் பேசியுள்ளார். "நான் அப்போது மிகவும் இளமையாக இருந்தேன். பேட்டிங்கில் என்னை நம்பர் 3-ல் களமிறக்கியது ஒரு சீனியர் வீரருக்குப் பிடிக்கவில்லை. 'இவன் எப்படி எனக்கு முன்னால் பேட்டிங் செய்யப் போகலாம்?' என்று அவர் கோபப்பட்டார்" என்று பதான் கூறியுள்ளார்.
அந்த வீரர் தன்னைவிடச் சிறந்த பேட்ஸ்மேன் என்று நினைத்ததாகவும், இந்த முடிவு அவரை மிகவும் கோபப்படுத்தியதாகவும் பதான் குறிப்பிட்டார். மேலும், அந்தக் கோபத்தில் அந்த சீனியர் வீரர் தனது ஜெர்சியைப் பிடித்ததாகவும் பதான் உறுதிப்படுத்தினார்.
இந்தச் சம்பவத்தை வெளிப்படுத்திய இர்பான் பதான், அந்த வீரரின் பெயரை வெளியிட மறுத்துவிட்டார். "பெயரைக் கூறி யாரையும் அவமதிக்க விரும்பவில்லை. கிரிக்கெட்டில் நிரந்தர நட்பும் இல்லை, நிரந்தரப் பகையும் இல்லை" என்று அவர் கூறினார்.
இருப்பினும், அந்த வீரர் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக் அல்லது விவிஎஸ் லக்ஷ்மண் ஆகிய ஜாம்பவான்களில் ஒருவர் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த வெளிப்படையான பேட்டி, இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் எப்போதும் நிலவும் போட்டி மற்றும் ஈகோ பிரச்சினைகளை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இளம் வீரராக அணிக்குள் வந்த இர்பான் பதான், இதுபோன்ற அழுத்தங்களையும் தாண்டி சாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.