மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இர்பான் பதான், திடீரென அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதன் பின்னணி குறித்து, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மௌனம் கலைத்துள்ளார்.
அப்போதைய கேப்டன் எம்.எஸ். தோனியா அல்லது பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனா? யார் தன்னை பிளேயிங் 11-இல் இருந்து நீக்கும் முடிவை எடுத்தது என இர்பான் பதான் கூறியுள்ளார்.

2003-ல் தனது 19வது வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமான இர்பான் பதான், தனது ஸ்விங் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறமையால் குறுகிய காலத்திலேயே இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறினார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களிலும் கலக்கிய அவர், 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் ஜொலித்தார்.
ஆனால், 2009-ம் ஆண்டுக்குப் பிறகு அவரது கிரிக்கெட் வாழ்க்கை தலைகீழாக மாறியது. இலங்கை ஒருநாள் தொடருக்குப் பிறகு, அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து அணிக்குத் திரும்பினாலும், அவரால் முன்பு போல நிரந்தரமாக இடம்பிடிக்க முடியவில்லை. இறுதியில் 2020-ம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், தான் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இர்பான் பதான் மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், "அது 2009-ம் ஆண்டு, நாங்கள் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்தோம். அதற்கு முன்பு இலங்கையில் நானும் என் சகோதரர் யூசுப்பும் சேர்ந்து ஒரு போட்டியை வென்று கொடுத்திருந்தோம். 60 பந்துகளில் 27-28 ரன்கள் தேவை என்ற நிலையில் நாங்கள் வெற்றி பெற்றோம். அந்தச் சூழலில் வேறு யாராவது இருந்திருந்தால், அவர்களை ஓராண்டுக்கு அணியை விட்டே நீக்கியிருக்க மாட்டார்கள்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நியூசிலாந்தில் முதல் மூன்று போட்டிகளிலும் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. நான்காவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. கடைசிப் போட்டியிலும் நான் இல்லை. அப்போது நான் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனிடம் சென்று, 'என்னை ஏன் நீக்கினீர்கள்? நான் எதையாவது சரி செய்து கொள்ள வேண்டுமா?' என்று கேட்டேன்," என்று அந்த நிகழ்வை நினைவு கூர்ந்தார்.
இர்பான் பதானின் கேள்விக்கு, பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் இரண்டு காரணங்களைக் கூறியதாகவும், அதுவே, இந்த நீக்கத்திற்குப் பின்னால் தோனி இருந்ததை உறுதிப்படுத்தியதாக இர்பான் குறிப்பிட்டார்.
"கிர்ஸ்டன் என்னிடம், 'சில விஷயங்கள் என் கையில் இல்லை' என்றார். அதுதான் அவர் சொன்ன சரியான வார்த்தைகள். நான் யாரிடம் இருக்கிறது என்று கேட்டேன், ஆனால் அவர் சொல்லவில்லை. அது யார் கையில் இருக்கிறது என்பது எனக்கு அப்போதே தெரியும். ஆடும் லெவனை கேப்டன் தான் முடிவு செய்வார். அந்த நேரத்தில் தோனி தான் கேப்டன். அந்த முடிவு சரியா, தவறா என்று நான் விவாதிக்க விரும்பவில்லை. ஒவ்வொரு கேப்டனுக்கும் தனது அணியை வழிநடத்த உரிமை உண்டு," என்று பதான் கூறினார்.
"இரண்டாவதாக அவர் சொன்ன காரணம், 7-வது இடத்தில் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டரைத் தேடுவதாகக் கூறினார். அது நியாயம்தான். என் சகோதரர் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர், நான் ஒரு பந்துவீச்சு ஆல்ரவுண்டர். இருவருக்கும் வித்தியாசம் இருந்தது. ஆனால், அணியில் ஒருவருக்கு மட்டுமே இடம் இருந்தது. இப்போதெல்லாம் இரண்டு ஆல்ரவுண்டர்கள் தேவையா என்று கேட்டால், மகிழ்ச்சியாக இருவரையுமே எடுத்துக்கொள்வார்கள்," என இர்பான் பதான் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.