இது எல்லாம் ஒரு பவுலிங்கா? ரொம்ப மோசம்..ஜோ ரூட்டை ஒரு முறை கூட அவுட்டாக்கவில்லை- இர்பான் பதான் சாடல்
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் முழுவதும் ஜோ ரூட்டை ஒருமுறை கூட இந்திய பந்துவீச்சாளர்களால் ஆட்டமிழக்க செய்ய முடியாததை சுட்டிக்காட்டி இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான், விமர்சித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 2-1 என கைப்பற்றியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ஜோ ரூட் 48 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஜோ ரூட்டுக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் சரியான திட்டமிடலுடன் செயல்படவில்லை என்று இர்பான் பதான் தனது யூடியூப் சேனலில் சாடியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "நெருக்கடியான சூழ்நிலையிலும் ரோஹித் சர்மா ரன்கள் குவித்தது சாதகமான விஷயம். விராட் கோலியும் சிறப்பாக விளையாடினார். இந்திய அணி நல்ல போராட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், இந்த தொடர் முழுவதும் ஜோ ரூட்டை நம்மால் ஒருமுறை கூட வீழ்த்த முடியவில்லை. அவரை அவுட் செய்யக்கூடிய ஒரு பந்துவீச்சாளர் கூட நம்மிடம் இல்லை.
அணியில் ஒரு wrist spinner இருந்திருந்தால் நிலைமை மாறியிருக்கலாம். ஆனால், நான்கு முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது, ரூட்டை வீழ்த்துவதற்கான திட்டமும் திறமையும் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்" என்று கூறினார். இந்த தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் ஜோ ரூட் முறையே 76* , 99* , 74* ரன்கள் குவித்து, மொத்தம் 249 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் காரணமாக அவர் 'தொடர் நாயகன்' விருதையும் வென்றார்.
புதிய பந்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் வீசிய லெந்த் குறித்து இர்பான் பதான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். "புதிய பந்தில் நாம் சரியான லெந்தில் பந்து வீசவில்லை, அதை இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். புதிய பந்தில் விக்கெட் விழாதபோது, நடுப்பகுதி ஓவர்களில் போட்டியை கட்டுக்குள் கொண்டு வர யாரும் இல்லை.
பிரின்ஸ் அழுத்தத்தில் இருந்தார். பந்து வீசும் லைன் மற்றும் லெந்த் மீதான கட்டுப்பாடு அங்கே இல்லை. எல்லாவற்றையும் விட, டெத் ஓவர்களில் வகுக்கப்பட்ட திட்டங்கள் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தன. பட்லருக்கு சாதகமான களம் அமைந்ததும், அவர் போட்டியை நம்மிடமிருந்து முழுமையாக பறித்துவிட்டார்.போட்டியின் 41 முதல் 50 வரையிலான ஓவர்களில் இந்திய அணி 126 ரன்களை வாரிக்கொடுத்தது. இதில் கடைசி ஐந்து ஓவர்களில் மட்டுமே 82 ரன்கள் எடுக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications

