டெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் என்றாலே களத்தில் அனல் பறக்கும். சில சமயம் களத்திற்கு வெளியேயும் சில சீண்டல்கள் நடக்கும். அப்படியான ஒரு சம்பவத்தை இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தற்போது பகிர்ந்துள்ளார். இதில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியின் திமிர்ப்பேச்சை நிறுத்தியது குறித்து இர்பான் பதான் விவரித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. கராச்சியில் இருந்து லாகூருக்கு இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது, இர்பான் பதான் அருகே வந்த ஷாஹித் அப்ரிடி, பதானின் தலைமுடியைக் கலைத்து, "என்ன சின்னப் பையனே, எப்படி இருக்கிறாய்?" என்று வம்பிழுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த இர்பான் பதான், "நீ எப்போதிருந்து எனக்கு அப்பாவானாய்?" என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இர்பான் பதான் ஒரு படி மேலே சென்று அப்ரிடியை அதிரடியாகக் கலாய்த்துள்ளார்.
தனக்கு அருகில் அமர்ந்திருந்த பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக்கிடம் பேசிய இர்பான் பதான், "இங்கே என்னென்ன வகையான இறைச்சி கிடைக்கும்?" என்று கேட்டுள்ளார். ரசாக் சில வகைகளைக் கூற, உடனே பதான், "நாய் இறைச்சி கிடைக்குமா?" என்று கேட்டுள்ளார்.
ஷாஹித் அப்ரிடிக்கு கேட்கும் தொனியில் பதான் இதைக் கேட்டதும், ரசாக் அதிர்ச்சியடைந்து, "ஏன் இப்படி கேட்கிறாய்?" என்றுள்ளார். அதற்கு இர்பான் பதான், "அவர் (அப்ரிடி) நாய் கறி சாப்பிட்டிருக்கிறார் போல, அதான் ரொம்ப நேரமாகக் குரைத்துக்கொண்டே இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
இந்த பதிலைக் கேட்டதும் அப்ரிடியால் எதுவும் பேச முடியவில்லை. விமானத்தில் இருந்த மற்ற பாகிஸ்தான் வீரர்களும் இந்தச் சம்பவத்தைக் கண்டு சிரித்துள்ளனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு, விமானப் பயணம் முடியும் வரை அப்ரிடி தன்னிடம் எதுவும் பேசவில்லை என்றும், அதன்பிறகு ஒருபோதும் தன்னிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டதில்லை என்றும் இர்பான் பதான் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே பதற்றம் நிறைந்ததாகப் பார்க்கப்படும் நிலையில், வீரர்கள் களத்திற்கு வெளியே இதுபோன்று ஜாலியாக இருந்த நிகழ்வுகள், இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.