மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்தும், களத்தில் நடந்த சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் தான் சந்தித்த இனவெறித் தாக்குதல் மற்றும் அதற்கு பின் அவர்களுக்கு தந்த பதிலடி ரகசியத்தை உடைத்துள்ளார் இர்பான் பதான்.
2008-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பெர்த் நகரில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அந்தப் போட்டி குறித்து பேசிய இர்பான் பதான், ஆஸ்திரேலிய ரசிகர்களின் இனவெறித் தாக்குதலை எதிர்கொண்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "நான் பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, அங்குள்ள ரசிகர்கள் என்னைக் குறிவைத்து, 'நீ இந்திய கறி சாப்பிட்டிருக்கிறாய், உன்னிடம் கறி வாசனை வருகிறது' என்று தொடர்ந்து இனரீதியாகத் திட்டிக்கொண்டே இருந்தனர். ஆஸ்திரேலிய ரசிகர்கள் எப்போதுமே வீரர்களின் மன உறுதியைக் குலைத்து, ஆட்டத்தில் இருந்து கவனத்தைச் சிதறடிக்க முயற்சிப்பார்கள்" என்று குறிப்பிட்டார்.
அந்த தொடரில் இர்பான் பதான் விக்கெட் எடுத்தவுடன், ஆக்ரோஷமாக தனது நாக்கை வெளியே நீட்டி கொண்டாடியது மிகவும் பிரபலம். அது எதிரணி வீரரைச் சீண்டும் செயல் என்று பலர் நினைத்திருந்த நிலையில், அது இனவெறித் தாக்குதலுக்குக் கொடுக்கப்பட்ட பதிலடி என்று இர்பான் பதான் விளக்கியுள்ளார்.
"ரசிகர்களின் இனவெறிப் பேச்சுக்கு நான் பதிலடி கொடுத்தேன். விக்கெட் வீழ்த்திய பிறகு, எனது நாக்கு மிகவும் சுத்தமாக இருக்கிறது, அதில் எந்த வாசனையும் இல்லை என்பதைக் காட்டுவதற்காகவே எனது நாக்கை வெளியே நீட்டினேன். அந்தக் கொண்டாட்டம் முழுக்க முழுக்க அந்த ரசிகர்களுக்காகத்தான்" என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்த 2008 பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. அந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்ட இர்பான் பதான், ஆட்ட நாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சிறப்பான செயல்பாடுகளுக்கு பிறகு தனக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் மறுக்கப்பட்டது என்றும், அதற்கு காரணம் தோனியா அல்லது கேரி கிர்ஸ்டனா? என்பது பற்றியும் இர்பான் பதான் பேசி உள்ளார்.