உணர்வுப்பூர்வமான ரசிகர் கூட்டம்
மகேந்திர சிங் தோனிக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் போல உணர்வுப்பூர்வமான ரசிகர் கூட்டம் வேறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு 2019ஆம் ஆண்டில் அத்தனை சம்பவங்கள் நடந்தேறின.
மூன்று அரைசதம்
2018ஆம் ஆண்டு மிக மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக விமர்சிக்கப்பட்ட தோனி, 2019ஆம் ஆண்டின் துவக்கத்தில் வரிசையாக மூன்று அரைசதம் அடித்து தான் இன்னும் துடிப்பான பேட்ஸ்மேன் தான் என அறிவித்தார்.
நம்பிக்கை
எனினும், அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பது தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வந்தது. இடையே ஐபிஎல் தொடரில் கலக்கலாக ஆடி நம்பிக்கை அளித்தார். அடுத்து உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றார்.
பேட்டிங்கில் தடுமாற்றம்
அந்த தொடரில் அவர் தேவையான நேரங்களில் ரன் குவித்தாலும். பேட்டிங்கில் தடுமாற்றம் தெரிந்தது. ஸ்ட்ரைக் ரேட் குறித்த விமர்சனமும் எழுந்தது. இந்த நிலையில், இந்தியா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ரன் அவுட்
அந்தப் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் சொதப்பிய நிலையில், ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய தோனி, ஜடேஜாவுடன் இணைந்து கடைசி வரை தாக்குப்பிடித்து ஆடினார். எனினும், 49வது ஓவரில் ரன் அவுட் ஆனார். இந்தியா தோல்வி அடைந்து உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
ஓய்வு பெறப் போகிறார்?
அடுத்து தோனி இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறப் போகிறார் என வதந்தி கிளம்பியது. சுமார் ஒரு வார காலத்திற்கு ட்விட்டரில் தோனி ஓய்வு பெறக் கூடாது என ஹேஸ்டேக் போட்டு டிரெண்டிங் செய்தனர் அவரது ரசிகர்கள். தோனி அப்போது முதல் இப்போது வரை ஓய்வைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
விடை தெரியா கேள்விகள்
அடுத்து நடந்த கிரிக்கெட் தொடர்களில் எதிலும் தோனி பங்கேற்கவில்லை. அவராக ஒதுங்கி இருக்கிறாரா? அல்லது இந்திய அணி அவரை ஒதுக்கி வைத்துள்ளதா? என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதில் இல்லை.
கங்குலி வரவு
பிசிசிஐ அமைப்பில் மிகப் பெரிய மாற்றமாக கங்குலி தலைவர் பதவியில் அமர்ந்தார். அவர் வந்தவுடன் தோனி விஷயத்தில் இருக்கும் மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கங்குலியும் உறுதியான பதிலை இதுவரை கூறவில்லை. எல்லாம் தோனி கையில் தான் உள்ளது என கூறி வருகிறார்.
ஜனவரி வரை…
தோனி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அடுத்து இந்திய அணியில் எப்போது ஆடுவீர்கள் என்ற கேள்விக்கு "ஜனவரி வரை எதுவும் கேட்காதீர்கள்" என பதில் அளித்தார். ஆறு மாதம் வனவாசம் என்பது போல தோனி ஜூலை மாதம் முதல் 2019 ஆண்டு இறுதி வரை ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை.
முடிஞ்சு போச்சா தல?
2020 ஐபிஎல் தொடரில் தோனி நிச்சயம் பங்கேற்கவுள்ளார். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்திய அணியில் அவர் மீண்டும் ஆடுவாரா? இல்லையா? என்பதே. ஜனவரி மாதத்தில் நல்ல செய்தி சொல்வாரா? அல்லது அந்த ரன் அவுட்டோட எல்லாமே முடிஞ்சு போச்சா தல?