டெல்லி: அஸ்வினுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சோபிக்காத அஸ்வின், ஜடேஜா இருவரையும் நீக்கிவிட்டு, கோஹ்லி குலதீப் யாதவ், சாஹல் பக்கம் சென்றார்.
இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்ற பின்பு இந்தியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த நேரத்தில், இங்கிலாந்தில் கவுண்டி போட்டிகளில் பங்கேற்றுவந்த அஸ்வின் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் உலககோப்பைக்கும் இங்கிலாந்தின் தொடருக்கும் தன்னை தயார்படுத்தும் வகையில் விளையாடி வருவதாகவே குறிப்பிட்டார்.
இந்திய அணியின் தேர்வாளர்களும் அஸ்வினை நீக்கியதாக அறிவிக்கவில்லை. ஆனால் இலங்கை தொடர் முடிந்தபின்பு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மீண்டும் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கத் தொடர்களுக்கும் மற்றும் டி 20 ஆட்டங்களுக்கு அஸ்வினை கண்டுகொள்ளவில்லை. தற்போது நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் பத்து ஆட்டங்களில் 6 விக்கட்டுகளும் ஓவருக்கு 7.5 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ள அஸ்வினை மீண்டும் தேர்வாளர்கள் நிராகரித்துள்ளனர்.
மணிக்கட்டிலிருந்த்து வீசப்படும் வித்தையை கற்கும் விதமாக 'லெக் ஸ்பின்' கூட போட்டுப் பார்த்துவிட்டார், ஆனால் பெரிதாக கைகொடுக்கவில்லை. கோஹ்லி வெளிப்படையாகவே சாஹல், குலதீப் இருவரும் உலகக்கோப்பைக்கு மிகவும் முக்கியமான வீரர்கள் என அறிவித்துவிட்ட நிலையில், 30 வயதை எட்டியுள்ள அஸ்வினுக்கு வெறும் டெஸ்ட் போட்டிகள் மட்டும்தான் மிஞ்சியுள்ளதா என்ற கேள்வி எழாமல் இல்லை.
அஸ்வின் தன்னை புதுப்பித்துக்கொள்வாரா இல்லை டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடினால் போதும் என்கிற மனநிலைக்கு வருவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.