பதவிக்காக மிரட்டல்? தேர்வுக்குழுவில் சேத்தன் சர்மா மீண்டும் வந்தது எப்படி.. கிளம்பும் புது சந்தேகம்?
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியங்களின் நடவடிக்கைகளில் அரசியல் பிரச்சினைகளும், ஈகோ மோதல்களும் பெரியளவில் விளையாடி இருப்பது சேத்தன் சர்மாவின் கருத்துக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பிசிசிஐ-க்குள் நடக்கும் பிரச்சினைகள் குறித்த உண்மைகளை கூறியுள்ளார்.
அவர் சாதாரணமாக பேசிய அனைத்து காட்சிகளையும் ரகசிய கேமிராக்கள் மூலம் பதிவு செய்து அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் கங்குலி, விராட் கோலி பிரச்சினை, கேப்டன்சி பிரச்சினை, ஊக்கமருந்து பயன்பாடு குறித்து திடுக்கிடும் தகவல்களை கொடுத்துள்ளார்.

சேத்தன் சர்மா கருத்து
அதாவது முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கும் - விராட் கோலிக்கும் யார் பெரியவர் என்ற மோதல் இருந்தது. பலருக்கும் கோலியை பிடிக்காத காரணத்தில் தான் கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதே போல இந்திய அணியில் உள்ள பல்வேறு வீரர்கள் 80 - 85% உடற்தகுதியை மட்டுமே வைத்திருப்பார்கள். ஊக்க மருந்தை பயன்படுத்திக்கொண்டு முழு உடற்தகுதி இருப்பதாக கூறி விளையாடி வருகின்றனர் எனக்கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

மற்றொரு சிக்கல்
இந்நிலையில் இந்த உண்மைகள் மூலம் மற்றொரு விஷயத்தை ரசிகர்கள் கணித்துள்ளனர். அதாவது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து தேர்வுக்குழுவை மொத்தமாக பணிநீக்கம் செய்து பிசிசிஐ உத்தரவிட்டது. இதன் பின்னர் ஒரு மாதத்திற்கும் மேலாக தேர்வுகள் நடத்தி புதிய தேர்வுக்குழு ஒன்றை இறுதி செய்தனர். ஆனால் சேத்தன் சர்மாவே தான் மீண்டும் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

சந்தேகிக்கும் ரசிகர்கள்
"இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே" என்ற கதையை போல ரசிகர்கள் கிண்டல் அடித்து வந்தனர். அதாவது வீரர்கள் தேர்வுக்கு இறுதி அனுமதியை கொடுப்பது தலைவர் சேத்தன் சர்மா தான். அணி தேர்வு சரியில்லை எனக்கூறிவிட்டு, மீண்டும் அவரையே தலைவராக நியமித்ததால் ரசிகர்கள் சந்தேகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

காரணம் என்ன
பிசிசிஐ-க்குள் கங்குலி - விராட் கோலி இடையே நடந்த பிரச்சினை, விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பின்னால் என்ன நடந்தது? போன்றவைகளின் உண்மை தன்மையை அறிந்த முக்கிய நபர் சேத்தன் சர்மா. வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துகிறார்கள் போன்ற ரகசிய தகவல்களை அவர் அறிந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் வெளிச்சத்திற்கு வராத மேலும் பல தகவல்கள் அவருக்கு தெரிந்திருக்கும்.

பணிக்காக மிரட்டல்
எனவே தன்னை பணிநீக்கம் செய்தால் பத்திரிகைகளில் உண்மையை கூறிவிடுவேன் என சேத்தன் சர்மா ஏன்? தலைமையை மிரட்டியிருக்கக்கூடாது. உண்மை தெரிந்தவர் பணியில் இருந்திருக்கலாம் என ஏன் செயலாளர் ஜெய் ஷா அவருக்கு ஆதரவாக நின்றிருக்கக்கூடாது? போன்ற பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதன் மூலம் சேத்தன் சர்மாவின் பதவி நியமன விஷயத்தில் குளறுபடிகள் நடந்திருக்கலாம் என்ற சர்ச்சையும் கிளம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications