எதற்கும் அஞ்ச மாட்டார்
விபி சந்திரசேகர் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் ஆடி இருக்கிறார். தமிழக அணிக்காக ரஞ்சி தொடரில் பல போட்டிகளில் ஆடி உள்ள அவர் அதிரடி ஆட்டக்காரர். ஹெல்மட் போடாமல் பவுன்சர் பந்துகளை துவம்சம் செய்வார். எதற்கும் அஞ்ச மாட்டார். கிரிக்கெட் விளையாட்டு தாண்டிய அவரது செயல்பாடுகளும் அப்படியே தான் இருக்கும் என கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் மூன்று ஆண்டுகளில் மானேஜராக இருந்த அவர், முதல் அணியை தேர்வு செய்ததிலும் பெரும் பங்கு வகித்தவர் என கூறப்படுகிறது. தோனி, ரெய்னா உள்ளிட்ட முக்கிய வீரர்களை சிஎஸ்கே அணிக்கு கொண்டு வந்ததில் இவரது பங்கு அதிகம்.
காஞ்சி வீரன்ஸ் அணி
பயிற்சியாளர், வர்ணனையாளர் என ஏராளமான பணிகளை செய்து வந்த விபி சந்திரசேகர் எந்த தனி மனிதரும் எடுக்க அஞ்சும் ஒரு முடிவை எடுத்தார். டிஎன்பிஎல் டி20 தொடர் துவங்கும் போது, அதில் காஞ்சி வீரன்ஸ் என்ற அணியை வாங்கினார்.
நஷ்டம்
டிஎன்பிஎல் தொடர் துவங்கி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த தொடர் இன்னும் வளரும் நிலையிலேயே இருப்பதால், உரிமையாளர்களுக்கு பெரிய லாபம் இல்லை என கூறப்படுகிறது. மற்ற உரிமையாளர்கள் அனைவரும் பெரிய நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் என்பதால் டிஎன்பிஎல் நஷ்டம் அவர்களை பாதிக்கவில்லை.
வங்கியில் கடன்
ஆனால், விபி சந்திரசேகர் தனி மனிதர் என்பதால் வங்கியில் கடன் வாங்கி தான் அணியை வாங்கி உள்ளார். சுமார் 3 - 4 கோடி வரை கடன் வாங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த கடன் குறித்து வங்கி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதனால் கடந்த 3 மாதங்களாக அவர் மன உளைச்சலில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
அணியை விற்க முயன்றார்
காஞ்சி அணியை விற்க முயன்றார் என்றும் ஒரு தகவல் இருக்கிறது. இந்த நிலையில் தான் டிஎன்பிஎல் இறுதிப் போட்டிக்கு முன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். விபி சந்திரசேகர் அணியை விற்றாலும் அவருக்கு லாபம் கிடைத்திருக்கும் என்று சிலர் கூறுகின்றனர்.
பொருளாதார மந்தம்
அதே சமயம், தற்போது உள்ள பொருளாதார மந்த நிலையில் யாரும் கிரிக்கெட் அணியை வாங்க முன் வர மாட்டார்கள் என்றும் சிலர் கூறி உள்ளனர். 3 கோடி நஷ்டத்தை அவரால் ஈடுகட்ட முடியும் என்றாலும், மன உளைச்சலை சரி செய்ய முடியாமல் இந்த முடிவை எடுத்தாரா? இதுவரை காவல்துறை சார்பாக அதிக தகவல்கள் வெளியாகவில்லை. மர்மம் விரைவில் விலகுமா?