
தன் வரைக்கும்
எப்போதுமே கவாஸ்கர் தன் வரைக்கும் மட்டுமே அதிகம் கவலைப்படுவார், அக்கறை காட்டுவார். இதை அவரது காலத்தில் அவருடன் ஆடிய பல சக வீரர்களே பலமுறை சொல்லியுள்ளனர்.

கபிலுடன் சற்றும் ஒத்துப் போகாதவர்
முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலும் கவாஸ்கர் பல போட்டிகளில் ஆடியுள்ளார். ஆனால் ஒருமுறை கூட அவர் கபிலுடன் ஒத்துப் போனதாக வரலாறே இல்லை என்பார்கள்.

அணிக்காக ஆடியதை விட
கவாஸ்கர் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் கூட அவர் அணிக்காக ஆடியது என்பது வெகு அரிது என்று விமர்சிப்பவர்கள்தான் அதிகம் உள்ளனர்.

உலகக் கோப்பையில் ஆமை ஆட்டம்
அதற்கு ஒரு அருமையான உதாரணம், 1975ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் அவர் ஆடிய அபாரமான ஆட்டம். அப்போது 60 ஓவர் போட்டி அது. ஜூன் 7ம் தேதி இந்தியாவும், இங்கிலாந்தும் மோதின. அப்போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 334 ரன்களைக் குவித்திருந்தது.

கட்டை கவாஸ்கர்
அடுத்து ஆட வந்த இந்தியா, ரசிகர்களை பைத்தியக்காரர்களாக்கி விட்டது. அதாவது கவாஸ்கரின் ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் காரித் துப்பாத குறை. அப்படி ஒரு மோசமான பேட்டிங்கை கவாஸ்கர் வெளிப்படுத்தினார்.

மோசமான பேட்டிங்குக்கு இதுதான் மாடல்
அந்தப் போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய கவாஸ்கர் 60 ஓவர் முழுவதும் நின்று கொண்டிருந்தார் - அப்படித்தான் சொல்ல வேண்டும். எப்போதாவது ரன் எடுப்பார். வந்த பந்தையெல்லாம் சும்மா தட்டி விட்டு விட்டு காக்காய் பறக்கிறதா, கழுகு பறக்கிறதா என்று வேடிக்கை பார்த்தபடி இருந்தார் கவாஸ்கர். இப்படியாக 60 வது ஓவர் வரை கட்டையைப் போட்டு போட்டு கடைசி வரை அவுட்டே ஆகாமல் 34 ரன்களை எடுத்து முடித்து டயர்ட் ஆகி பெவிலியனுக்கு வந்து சேர்ந்தார் கவாஸ்கர்.

174 பந்துகளைச் சாப்பிட்டு
இந்த 34 ரன்களை எடுப்பதற்காக மொத்தம் 174 பந்துகளைச் சந்தத்திருந்தார் கவாஸ்கர்.

ஏன் அப்படி விளையாடினார்
நிச்சயம் கவாஸ்கர் சரியாக விளையாடவில்லை, ஒழுங்காக விளையாடவில்லை என்பது அவருக்குமே தெரிந்திருக்கும். கொஞ்சம் கூட ஆடவே முயற்சிக்காமல் அப்படி ஒரு ஆட்டத்தை ஏன் ஆடினார் என்பதை இதுவரைக்கும் கவாஸ்கர் விளக்கமே இல்லை என்பதுதான் சோகமானது.

ரசிகர்களை சற்றும் உணராத கவாஸ்கர்
மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள், கவாஸ்கர் ஆட்டத்தைப் பார்த்து வெறுத்துப் போய் , ஆடுங்கள் கவாஸ்கர் என்று குரல் கொடுத்தபடி இருந்தனர். ஆனால் அவர்களை சற்றும் சட்டை செய்யவே இல்லை கவாஸ்கர்.

83 உலகக் கோப்பைப் போட்டியிலும் சுயநலம்
இதேபோல 1983ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா கபில் தேவ் தலைமையில் அபாரமாக ஆடி கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. அத்தொடரிலும் கூட கவாஸ்கர் கை கொடுக்கவில்லை.

ஜிம்பாப்வே போட்டியில் ஷாக் ஆட்டம்
குறிப்பாக ஜிம்பாப்வே அணியுடனான முக்கியமான போட்டியில் இந்தியா வென்றே ஆக வேண்டிய முக்கியமான போட்டியில் பொறுப்பே இல்லாமல் டக் அவுட் ஆனார் கவாஸ்கர். ஸ்ரீகாந்த்தும் டக். தொடக்க வீரர்கள் எல்லாருமே சீக்கிரமே போய் விட்டனர். வேறு வழியில்லாமல் கபில் தேவ் தனி மனிதராக, அதிரடியாக வெறி பிடித்தவர் போல ஆடி ஆட்டமிழக்காமல் 175 ரன்களைக் குவித்து இந்தியாவைக் கரையேற்றினார்.

இறுதிப் போட்டியில் கவாஸ்கரை நம்பாத கபில்
அந்த உலகக் கோப்பைப் போட்டியில் கடைசி வரை கபில் தேவ், கவாஸ்கரின் பேட்டிங்கை நம்பவே இல்லை. மாறாக பந்து வீச்சாளர்களையே அதிகம் நம்பி இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தார்.

மும்பை வீரர்களுக்கே சாதகம்
இதேபோல நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். அதேபோல தான் இந்திய அணியில் இருந்தவரை மும்பை வீரர்களுக்கே அதிக அளவில் இடம் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டவர் கவாஸ்கர் என்ற குற்றச்சாட்டும் நீண்ட காலமாக இருந்தது.

சச்சினை இழுத்து வந்தவரும் இவரே
இந்திய அணிக்குள் சச்சினை அறிமுகப்படுத்தியதிலும் கவாஸ்கருக்கே முக்கியப் பங்கு உண்டு. ஆனால் சச்சின் பரவாயில்லை. தனது சக வீரர்களுக்கு நல்ல ரோல் மாடலாக இருந்து வழி காட்டி ஆட வைத்தவர். ஆனால் கவாஸ்கரை எந்த வகையிலும் சேர்க்கவே முடியாது என்பதே அவரை அறிந்தவர்கள் கூறும் சொல்லாகும்.
இவர் கிரிக்கெட் வாரியத் தலைவரானால் எப்படி இருக்குமோ தெரியவில்லை...!


Click it and Unblock the Notifications











